கோவையில் 10 ஆயிரம் பேருக்கு முதல்வர் காலை உணவு தயார்
கோவையில் 10 ஆயிரம் பேருக்கு முதல்வர் காலை உணவு தயார்
UPDATED : ஆக 27, 2025 12:00 AM
ADDED : ஆக 27, 2025 09:58 AM

கோவை:
கோவையில் நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் நேற்று துவக்கப்பட்டது.
மாநகராட்சிக்கு உட்பட்ட 46 பள்ளிகளில் 6,026 மாணவர்கள் உட்பட கல்வி மாவட்ட அளவில், 9,818 பேர் பயனடைகின்றனர். கோவை நகரம், பேரூர், பெரியநாயக்கன்பாளையம், காரமடை, எஸ்.எஸ்.குளம், அன்னுார், சூலுார் ஒன்றியங்களில் 45 துவக்கப்பள்ளிகள் மற்றும் 13 நடுநிலைப்பள்ளிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கான காலை உணவு கண்ணம்பாளையம் மற்றும் ஆர்.எஸ்.புரம் மையங்களில்தயாரிக்கப்படுகிறது.
காரமடை நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு காரமடை நடுநிலைப்பள்ளியிலும், மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு அன்னுார் ரோட்டில் உள்ள நகராட்சி ஆரம்பப்பள்ளியிலும் தயாரித்து வழங்கப்படுகிறது. தட்டம், டம்ளர், பாய், அறிவிப்பு பலகை போன்றவை பள்ளி நிர்வாகம் மூலம் வழங்கப்பட்டன.
இத்திட்ட செயல்பாடுகள் சிறப்பு செயலியால் கண்காணிக்கப்படுகின்றன. உணவு சமைப்பது முதல் மாணவர்களுக்கு வழங்குவது வரையிலான தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். தலைமையாசிரியர்கள் அவற்றை உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிங்காநல்லுார் காந்தி நுாற்றாண்டு நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில், கலெக்டர் பவன்குமார் துவக்கி வைத்தார். எம்.பி. ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுவே மெனு
திங்கள், புதன் - பொங்கல் செவ்வாய் - கோதுமை ரவா கிச்சடி வியாழன் - ரவா உப்புமா வெள்ளி - சேமியா கிச்சடி அனைத்து தினங்களிலும் சாம்பார் வழங்கப்படும்.