பழைய கட்டடங்களில் பள்ளிக்கல்வித்துறை; ஒருங்கிணைந்த வளாகம் அமைக்க கோரிக்கை
பழைய கட்டடங்களில் பள்ளிக்கல்வித்துறை; ஒருங்கிணைந்த வளாகம் அமைக்க கோரிக்கை
UPDATED : ஆக 27, 2025 12:00 AM
ADDED : ஆக 27, 2025 09:57 AM

கோவை:
கல்வியில் நவீன தொழில் நுட்பங்களால், மாணவர்கள் கற்றலில் வேற லெவலுக்கு சென்று கொண்டிருக்கும் இன்றைய நிலையில், கோவை மாவட்டத்தில் பள்ளிக்கல்வி நிர்வாக கட்டடங்கள், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள, பழைய கட்டடங்களில் செயல்பட்டு வருகின்றன.
சென்னைக்கு அடுத்தபடியாக கல்வி, தொழில், மற்றும் ஆராய்ச்சி மையமாக வேகமாக வளர்ந்து வரும் கோவையில், பள்ளிக்கல்வியின் அலுவலக பணிகளுக்கான அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை.
அடிப்படை வசதிகள் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, பயிற்சி வகுப்புகள் போன்றவற்றை நடத்த, அரசு மற்றும் தனியார் பள்ளிகளை அதிகாரிகள் நாட வேண்டிய நிலை உள்ளது.
பொதுத்தேர்வு வினாத்தாள்கள் மதிப்பீடு, தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டங்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுடனான கலந்தாய்வுகள் போன்றவற்றை நடத்துவதற்கும் தனியார் பள்ளிகளை நாட வேண்டிய சூழல் உள்ளது. சில சமயங்களில், பயிற்சி நடத்த இடம் கிடைக்காததால், திட்டமிடப்பட்ட பயிற்சிகள் ஒத்திவைக்கப்படுகின்றன.
மாவட்ட கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள கழிவறைகள் போதுமானவையாக இல்லை; தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. கழிவறை எண்ணிக்கையை அதிகரித்து பராமரிக்க வேண்டும் என்று, கல்வி அலுவலக ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் கருத்து
ஒண்டிப்புதுாரில் தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையம் (டயட்), குனியமுத்துார் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடக்கக்கல்வி அலுவலகம், கவுண்டம்பாளையத்தில் அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகம், ராஜவீதியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம், எஸ்.எஸ்.ஏ., அலுவலகம்...இப்படி ஒவ்வொரு அலுவலகமும் ஆங்காங்கே பிரிந்து கிடக்கிறது.
ஒவ்வொரு தேவைக்கும் ஆசிரியர்களும், சில வேளைகளில் மாணவர்களும் வீணாக அலைய வேண்டியுள்ளது. பள்ளிக்கல்வி அலுவலகம் மேம்படுத்தப் பட்டால், கல்வி சார்ந்த அனைத்துத் திட்டங்கள், ஆசிரியர் பயிற்சிகள், வினாத்தாள்கள், மற்றும் விடைத்தாள்கள் பாதுகாப்பாக வைப்பது, விடைத்தாள் திருத்துவது போன்ற அனைத்து பணிகளையும் ஒரே இடத்தில் மேற்கொள்ள முடியும். இதனால் மீட்டிங் நடத்துவது, விடைத்தாள் திருத்துவது போன்ற பணிகளுக்காக, தனியார் பள்ளிகளை நாட வேண்டிய நிலை இருக்காது; அப்பள்ளிகளில் மாணவர்களின் கல்விக்கு இடையூறு வராது.