பள்ளி, கல்லுாரிகளில் மொபைல் போனுக்கு தடை? ஆலோசிப்பதாக முதல்வர் சித்தராமையா தகவல்
பள்ளி, கல்லுாரிகளில் மொபைல் போனுக்கு தடை? ஆலோசிப்பதாக முதல்வர் சித்தராமையா தகவல்
UPDATED : பிப் 23, 2026 12:09 PM
ADDED : பிப் 23, 2026 12:12 PM
இன்றைய பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இடையே மொபைல் போன்கள் மோகம் அதிகரித்து உள்ளது. இதனால், படிப்பில் கவனம் செலுத்தாமல், தேர்வில் தோல்வி அடைந்து வருகின்றனர்.
அலாரம் ஒலி
இதை தடுக்கும் வகையில், கர்நாடகாவில் விஜயநகரா, ஹாவேரி ஆகிய மாவட்டங்களில் இரவு 7:00 முதல் 9:00 மணி வரை மொபைல் போன், 'டிவி' பார்ப்பதை தடுக்கும் வகையில், அலாரம் ஒலி எழுப்பப்படுகிறது. அப்போது வீட்டில் உள்ள பெரியவர்களும், 'டிவியை' அணைத்து விட்டு, மொபைல் போன் பார்ப்பதையும் தவிர்த்து வருகின்றனர்.
தங்கள் வீட்டு குழந்தைகளை படிக்கும்படி கூறி, அவர்களும் உடன் இருக்கின்றனர். இதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது. சமீபத்தில் நடந்த மாதாந்திர தேர்வில், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது.
இதை மாநிலம் முழுதும் விரிவுபடுத்தும் வகையில், நடப்பாண்டு முதல் மாணவர்கள் இடையே மொபைல் போன் பயன்பாட்டை கட்டுப்படுத்தி, புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கவும்; அறிவு வளர்ச்சிக்கான உகந்த சூழலை உருவாக்கும் நோக்கிலும், 'மொபைல் போனை கீழே போடு - புத்தகத்தை எடு' என்ற பிரசாரத்தை அமல்படுத்த, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.
இந்நிலையில், மாநிலத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் முதல்வர் சித்தராமையா ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
துணைவேந்தர்கள் இதில், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கூறுகையில், 'கல்லுாரி, பல்கலைக்கழக வளாகங்களுக்குள் மொபைல் போன்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும். மாணவர்களின் ஒழுக்கம், கவனம், மன ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை அவசியம் எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தினர்.
அதற்கு பதிலளித்து, முதல்வர் கூறியதாவது:
இளம் சமுதாயத்தினர் மத்தியல் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து உள்ளதை தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும். இன்று போதைப்பொருள் ஒரு கொடியாக நோயாக மாறிவிட்டது. பல்கலைக்கழக வளாகங்கள் முற்றிலும் போதைப்பொருள் இல்லாததாக மாற்ற வேண்டும். எந்த சூழ்நிலையிலும் வளாகத்துக்குள் போதைப்பொருள் மாபியாக்கள் செயல்பட அனுமதிக்க கூடாது.
16 வயது
அது போன்று மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்துவதையும் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. மொபைல் போன் தடை என்பது, 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
ஏனெனில், ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளில், பள்ளி குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளன.
இதனால், மாணவர்கள் பாடத்தில் கவனம் செலுத்தி, நல்ல மதிப்பெண்கள் பெறுவதாக தகவல்கள் கிடைத்து உள்ளன. சமூக ஊடகங்கள், மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்குகின்றன. இதை கட்டுப்படுத்த வேண்டும்.
எனவே, கல்வி வளாகங்களுக்குள் மொபைல் போன்களை கட்டுப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்படும். அவர்கள், கட்டுப்பாடுகளுக்கான அளவுகோல்கள், செயல்படுத்தும் முறை குறித்து விரிவான ஆய்வு நடத்துவர். அதன்பின், இது குறித்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

