அழிவின் பிடியில் 60 அதிசயங்கள்; கல்லுாரியில் விழிப்புணர்வு கண்காட்சி
அழிவின் பிடியில் 60 அதிசயங்கள்; கல்லுாரியில் விழிப்புணர்வு கண்காட்சி
UPDATED : பிப் 18, 2026 03:08 PM
ADDED : பிப் 18, 2026 03:10 PM

குன்னுார்:
நீலகிரியின் அழிவின் பிடியில் உள்ள, 60 அதிசயங்களை கொண்டுள்ள, காடுகளின் சூழல் போன்று குன்னுாரில் பிரம்மாண்ட கண்காட்சி நடத்தப்பட்டது.
குன்னுார் பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரி தாவரவியல் துறை சார்பில், அழிவின் பிடியில் உள்ள அதிசயங்கள் என்ற தலைப்பில், 60 வகையான உயிரினங்கள், தாவரங்கள் கண்காட்சி நடந்தது. கண்காட்சியை குன்னுார் வனச்சரகர் ரவீந்திரநாத் துவக்கி வைத்து பேசினார்.
ஊட்டி தோட்டக்கலை இணை இயக்குனர் நவநீதா , துணை தோட்டக்கலை அலுவலர் சந்திரன் முன்னிலை வகித்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்களின் பங்களிப்பு குறித்து பேசினர். கல்லுாரி முதல்வர் டாக்டர் ஷீலா, செயலாளர் சிஸ்டர் அல்போன்சா முன்னிலை வகித்தனர்.
தாவரவியல் துறைத் தலைவர் டாக்டர் ரோஸ் டி லீமா கூறுகையில், “நீலகிரியின் உயிர்ச் சூழல் மிகவும் தனித்துவமானது. நீலகிரிக்கு உரித்தான 'நீலகிரி ஸ்பின்சி பெர்ன், சின்னோமன், மிக்கேலியா' போன்ற அரிய தாவரங்கள் கொண்டு பிரம்மாண்ட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
வரையாடு, சிங்கவால் குரங்கு, எறும்புண்ணி போன்ற விலங்குகள், நீலகிரி சிரிப்பான், புளூ ராபின் போன்ற பறவைகள், பர்பிள் தவளை போன்ற இருவாழ்விகள், மற்றும் மலபார் டிரி நிம்ப் பட்டாம்பூச்சிகள் என மொத்தம் 60 வகையான உயிரினங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விரிவாக விளக்கப்பட்டது,” என்றார்.
இதில், வனப்பகுதிகள் அழிவதைத் தடுக்கும் விழிப்புணர்வு மாதிரிகள், தகவல்களுடன் கூடிய அறிவியல் விளக்கப் பலகைகள் இடம் பெற்றன. தாவரவியல் மாணவி பவித்ரா தயாரித்த காணொளி பார்வையாளர்களை ஈர்த்தது. எடப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கண்காட்சியை கண்டு களித்தனர். இந்த நிகழ்வில், 'நீலகிரியின் பசுமையை மீட்டெடுப்போம்' என, உறுதிமொழி எடுக்கப்பட்டது.

