மாணவியர் தலைமுடி வெட்டிய ஆசிரியர், ஆசிரியை மீது புகார்
மாணவியர் தலைமுடி வெட்டிய ஆசிரியர், ஆசிரியை மீது புகார்
UPDATED : ஜூலை 29, 2024 12:00 AM
ADDED : ஜூலை 29, 2024 11:51 PM
ராம்நகர்:
இரட்டை ஜடை போடவில்லை என, மாணவியரின் தலைமுடியை வெட்டிய ஆசிரியர் மீது, புகார் செய்யப்பட்டுள்ளது.
ராம்நகர் சென்னப்பட்டணாவின் அரளாளுசந்திரா கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. பள்ளி மாணவியர் தினமும் இரட்டை ஜடை போட்டு வர வேண்டும் என, ஆசிரியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன், எட்டாம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவியர், இரட்டை ஜடை போடாமல் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனால் கோபமடைந்த உடற்பயிற்சி ஆசிரியர் சிவகுமார், துணை ஆசிரியை பவித்ரா, மாணவியரின் தலைமுடியை வெட்டியுள்ளனர்.
இதையறிந்த மாணவியரின் பெற்றோர், பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். மேலும், சிவகுமார் மற்றும் பவித்ரா மீது, சென்னப்பட்டணா போலீசாரிடம் புகார் செய்து உள்ளனர். போலீசாரும் விசாரணையை துவக்கி உள்ளனர்.

