UPDATED : ஜூன் 15, 2024 12:00 AM
ADDED : ஜூன் 15, 2024 10:24 AM
கோவை :
அரசு மகளிர் கல்லூரியில் கலந்தாய்வு நடந்து வரும் நிலையில், பி.எஸ்சி., கணிதப் பாடத்தை தேர்ந்தெடுக்க, மாணவிகள் தயக்கம் காட்டுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
கோவை புலியகுளத்தில் உள்ள, அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் பி.காம்., பாடப் பிரிவுக்கு நேற்று முன்தினம் கலந்தாய்வு நடத்தப்பட்டது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் விண்ணப்பித்திருந்த நிலையில், 60 மாணவர்கள் சேர்ந்தனர். இதைத்தொடர்ந்து, பி.எஸ்சி., கணினி அறிவியல், கணிதம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு கலந்தாய்வு நேற்று நடத்தப்பட்டது. இதில், 40 கணினி அறிவியல் பாடப் பிரிவுக்கு 210 பேர் போட்டியிட்ட நிலையில், 40 மாணவிகள் சேர்க்கப்பட்டனர்.
கணிதப் பாடப் பிரிவில் 40 இடங்களுக்கு 13 மாணவிகள் மட்டுமே போட்டியிட்டதால், அவர்களுக்கு எளிதாக இடம் கிடைத்தது. கணினி அறிவியல் பாடப் பிரிவு கிடைக்காத 16 மாணவிகள், கணிதப் பாடப் பிரிவைத் தேர்ந்தெடுத்ததால் மொத்தம் 29 மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். 11 காலியிடங்கள் உள்ளன. இதைத்தொடர்ந்து, பி.ஏ., ஆங்கிலம் பாடப் பிரிவுக்கு இன்றும், பி.ஏ., தமிழ் பாடப் பிரிவுக்கு நாளையும், கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.
சேர்க்கை கட்டணம் தொடர்பான விவரங்களை, www.gascwcbe.ac.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
கணிதம் முக்கியம்
அரசு மகளிர் கல்லூரி முதல்வர் வீரமணி கூறுகையில், வணிகவியல், கணினி அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு மாணவிகள் மத்தியில் உள்ள வரவேற்பு, கணிதப் பாடத்துக்கு இல்லை. இந்த இரு பிரிவில் உள்ள பாடங்களுக்கு மட்டுமே எதிர்காலம் உள்ளதாக மாணவர்கள் எண்ணுகின்றனர். தமிழகம் முழுவதுமே இதுதான் நிலைமை. ஆரம்பகட்ட போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற, கணிதம் மிகவும் முக்கியம். எனவே, கணிதப் பாடத்தை தேர்ந்தெடுக்க மாணவர்கள் ஆர்வம் செலுத்த வேண்டும் என்றார்.

