மருத்துவ கல்வி இயக்குநர் நியமனத்தில் குழப்பம் நீடிப்பு
மருத்துவ கல்வி இயக்குநர் நியமனத்தில் குழப்பம் நீடிப்பு
UPDATED : செப் 04, 2025 12:00 AM
ADDED : செப் 04, 2025 07:25 PM

சென்னை:
மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் பதவிக்கு, பல்வேறு அதிகார மட்டத்தில் இருந்து அழுத்தம் வருவதால், அப்பணியிடம் இரண்டு மாதங்களாக நிரப்பப்படாமல் உள்ளன.
அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் மாணவர் சேர்க்கை உள்ளிட்டவற்றை நிர்வகிக்கும், மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநராக, சங்குமணி இருந்தார். அவரது பதவி காலம் ஜூன் மாதம் முடிவுக்கு வந்தது. அதன்பின், அப்பதவிக்கான தேர்வு பட்டியலில், ஆறு மருத்துவ கல்லுாரி முதல்வர்கள் அந்தஸ்திலான அதிகாரிகள் இருந்தனர்.
அவர்களில், முதல் நபராக இருந்தவர், 17 - பி ஒழுங்கு நடவடிக்கையில் சிக்கியுள்ளார். இதனால், இரண்டாம் இடத்தில் இருக்கும், பெண் முதல்வருக்கு, மருத்துவ கல்வி இயக்குநராகும் வாய்ப்பு உருவானது.
அவருக்கு அப்பணியை வழங்க, உயர் அதிகார மட்டத்தில் ஆதரவு கொடுக்கப்பட்டது. அவருக்கு பணி உத்தரவு வழங்க முடிவு எடுக்கப்பட்ட நிலையில், பட்டியலில் உள்ள மற்றவர்களும், தங்களுக்கு தெரிந்த அமைச்சர்கள் வழியாக, இயக்குநர் பதவிக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதன் காரணமாக, கடந்த இரண்டு மாதங்களாக, அப்பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது.
இது குறித்து அரசு டாக்டர்கள் கூறியதாவது:
மருத்துவ கல்வி இயக்குநர் பதவியை பொறுத்தவரை, முதல் ஆறு இடத்தில் இருக்கும் நபர்களில், அரசு விரும்பும் நபரை நியமித்து கொள்ளலாம். தற்போது, மருத்துவ கல்வி பொறுப்பு இயக்குநராக இருக்கும் தேரணிராஜன் உட்பட, பட்டியலில் மூன்று, நான்கு, ஐந்து இடங்களில் உள்ளவர்களும், அதிகார மட்டத்தில் இருப்போர் ஆதரவுடன், இயக்குநர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். திண்டுக்கல்லை சேர்ந்தவருக்கு பதவி உறுதி செய்யப்பட்டும், அரசாணை வெளியிடப்படவில்லை. இப்பிரச்னைக்கு முதல்வர் தமிழகம் திரும்பிய பின் தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.