கற்கும் கல்வி சமூகத்திற்கு பயன் அளிக்க வேண்டும்: ஜனாதிபதி முர்மு அறிவுரை
கற்கும் கல்வி சமூகத்திற்கு பயன் அளிக்க வேண்டும்: ஜனாதிபதி முர்மு அறிவுரை
UPDATED : செப் 04, 2025 12:00 AM
ADDED : செப் 04, 2025 07:29 PM

திருவாரூர்:
''மாணவர்கள் கற்கும் கல்வி, சமூகத்திற்கு பயன் அளிப்பதாக இருக்க வேண்டும்,'' என, ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார்.
திருவாரூர், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நேற்று, 10வது பட்டமளிப்பு விழா நடந்தது.
இதில், மாணவ - மாணவியருக்கு, பதக்கங்கள் வழங்கி, ஜனாதிபதி முர்மு பேசியதாவது:
கடந்த, 14 ஆண்டு கால செயல்பாட்டில் லட்சத்தீவு முதல், லடாக் வரையிலான மாணவர்கள், இந்த பல்கலைக்கழகத்தில் படித்து வருவதன் மூலம், இந்தியாவின் பன்முகத் தன்மையை, பல்கலைக்கழகம் பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறது.
பல்கலை கழகத்தில் படிக்கும், 3,000 மாணவர்களில், அதிக அளவில், பெண்கள் கல்வி பயில்வதும், மூன்றில், இரண்டு பங்கு பெண்கள் தங்கப்பதக்கம் பெற்று இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது.
மாணவர்கள் கற்கும் கல்வி, சமூகத்திற்கு பயன் அளிப்பதாக இருக்க வேண்டும். எனவே, மாணவர்கள், தாங்கள் கற்ற கல்வியை, அறிவியல் தொழில் நுட்பம், இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனிதகுல மேம்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும்.
பாரம்பரியம் மற்றும் நவீனத்தின் சிறப்பு அம்சங்களை ஒன்றாக கொண்டு, தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த, 20 ஆண்டுகளில், இணைய புரட்சி, உலகில் பல தொழில்களை உருவாக்கியுள்ளது.
இவ்வாறு, ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார்.
விழாவில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன், தமிழக முதல்வர் பிரதிநிதியாக அமைச்சர் கீதாஜீவன், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீரங்கத்தில் தரிசனம்
திருச்சி மற்றும் திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க, ஜனாதிபதி திரவுபதி முர்மு, தனி விமானத்தில், நேற்று காலை 10:50 மணிக்கு திருச்சி வந்தார். அமைச்சர்கள் நேரு, மகேஷ், கலெக்டர் சரவணன் வரவேற்றனர். தொடர்ந்து, திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க, ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் சென்றார்.
மீண்டும் மாலை 4:10 மணிக்கு திருச்சிக்கு வந்த ஜனாதிபதி, காரில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்றார்.
ஜனாதிபதியை, மாவட்ட கலெக்டர் சரவணன் மற்றும் ஹிந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். ரங்கா கோபுரம் முன், ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு, கோவில் அர்ச்சகர்கள் பூரணகும்ப மரியாதை அளித்தனர்.
கோவிலுக்குள் சென்ற ஜனாதிபதி, முதலில் சக்கரத்தாழ்வார், பெரிய பெருமாள் மற்றும் தாயார் சன்னிதிகளுக்கு சென்று வழிபட்டார். தொடர்ந்து உடையவர் எனப்படும் ராமானுஜர் சன்னிதியில் வழிபாடு செய்தார்.
கோவிலை பற்றி கேட்டு தெரிந்து கொண்ட அவர், ''பிரமாண்டமான கோவிலை பார்ப்பது சந்தோஷமாக உள்ளது. கோவில் நிரந்தரமான சந்தோஷத்தையும், சவுபாக்கியத்தையும் அளிக்கும்,'' என்றார்.