பொதுத்தேர்வு எழுதும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்துக் கடிதம்
பொதுத்தேர்வு எழுதும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்துக் கடிதம்
UPDATED : மார் 08, 2026 11:53 AM
ADDED : மார் 08, 2026 11:53 AM
திண்டுக்கல்:
மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 23 ஆயிரத்து 538 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இவர்களுக்கு கலெக்டர் சரவணன் தபால் அட்டையில் வாழ்த்துச் செய்தி எழுதி அனுப்பியுள்ளார்.
அவர் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது:
வருங்காலச் சமுதாயத் தூண்களே. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருக்கும் பதின்மப் பறவைகளே. ஆண்டுக் கணக்கில் விதைத்த கல்வி எனும் பயிரை அறுவடை செய்யும் காலமிது. உங்களுக்குள் மறைந்திருக்கும் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பே பொதுத்தேர்வு.
இது வரை குடத்தில் இட்ட விளக்காக பள்ளி அளவில் ஒளிர்ந்த நீங்கள் குன்றிலிட்ட விளக்காக மாநில அளவில் ஒளி வீச பொதுத்தேர்வு ஒரு நல்வாய்ப்பாகும். கவனம் குவித்துக் கருத்துடன் படியுங்கள்.
தவம் போல் படித்தால் தவறாது வெற்றி. கசடறக் கற்று களிப்புடன் தேர்வுக்குச் செல்லுங்கள். ஆசையாய் தேர்வு எழுதச் செல்லுங்கள். பெற்றோர், ஆசிரியர் ஆசியுடன் தேர்வில் வெல்லுங்கள். கற்றனைத் துாறும் அறிவு. கல்வி மட்டுமே எவராலும் அழிக்க முடியாத ஆயுதம். முயற்சி திருவினையாக்கும் என தெரிவித்துள்ளார்.

