UPDATED : மே 25, 2024 12:00 AM
ADDED : மே 25, 2024 11:40 AM
சென்னை:
திருவாரூர் மாவட்டம், தேவர்கண்டநல்லுார் ஸ்ரீ சரஸ்வதி அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளியை, 1992ல் அரசே ஏற்றது. கடந்த 1993ல் இந்த பள்ளியில் இடைநிலை ஆசிரியராக நியமிக்கப்பட்ட நக்கீரனின் நியமனத்துக்கு, அரசு ஒப்புதல் அளித்தது.
பின், 1997 முதல் ஆசிரியராக பணியாற்றி வந்த இவருக்கு, துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், 2014ல் தயாரிக்கப்பட்ட பட்டியலில், நக்கீரன் பெயர் இடம் பெறவில்லை; அவரை விட இளையவர்களுக்கு 2007 முதல் பதவி உயர்வும் வழங்கப்பட்டன.
இந்நிலையில், தனக்கு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நக்கீரன் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் அரசு ஊழியர் தான் என்பதால், பதவி உயர்வு பெற உரிமை உள்ளது. அனைத்து பணப் பலன்களுடன் பதவி உயர்வு வழங்க வேண்டும். கடந்த 2015 மார்ச் முதல் அவருக்கு உரிய சம்பள பாக்கியை வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.