கிரிக்கெட் போட்டி; இ.சி.ஆர்., மற்றும் சக்தி பள்ளி மாணவர்கள் முதலிடம்
கிரிக்கெட் போட்டி; இ.சி.ஆர்., மற்றும் சக்தி பள்ளி மாணவர்கள் முதலிடம்
UPDATED : ஜன 22, 2026 10:55 AM
ADDED : ஜன 22, 2026 10:57 AM
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் மாவட்ட அளவில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில், கனியாமூர் இ.சி.ஆர்., மற்றும் சக்தி இண்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.
பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்துவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், இந்திலி டாக்டர். ஆர்.கே.எஸ். கல்லுாரி மற்றும் டி.எஸ்.எம்., ஜெயின் பொறியியல் கல்லுாரி மைதானங்களில் பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடந்தது. கடந்த 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடந்த போட்டியில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
லீக் மேட்ச் முறையில் போட்டி நடத்தப்பட்டன. இதில், கனியாமூர் இ.சி.ஆர்., மற்றும் சக்தி இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.
உளுந்துார்பேட்டை பள்ளி குழு இரண்டாமிடம் பிடித்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டி.எஸ்.எம்., கல்வி நிறுவனங்களின் தலைவர் மனோகர்குமார், ஆர்.கே.எஸ். கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் மோகனசுந்தர் ஆகியோர் கோப்பை மற்றும் கேடயம் வழங்கினர். அப்போது, சக்தி பள்ளி நிர்வாக இயக்குநர் சக்தி ரவிக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் கவுதம், செந்தில்குமார், ராஜா, மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் லட்சுமி நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.

