அன்புள்ள அனைவருக்கும் எழுதுவது என்னவென்றால்...! கடிதம் எழுதும் போட்டிக்கு அழைப்பு
அன்புள்ள அனைவருக்கும் எழுதுவது என்னவென்றால்...! கடிதம் எழுதும் போட்டிக்கு அழைப்பு
UPDATED : அக் 18, 2024 12:00 AM
ADDED : அக் 18, 2024 09:45 AM
கோவை:
தபால் துறையால் நடத்தப்படும் கடிதம் எழுதும் போட்டியில் பங்கேற்று பரிசு பெற, அழைப்பு விடப்பட்டுள்ளது.
கோவை அஞ்சல் கோட்ட முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சிவசங்கர் கூறியுள்ளதாவது:
இந்திய அஞ்சல் துறை சார்பில், தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி வரும் டிச., 14ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இப்போட்டியில் அனைத்து வயதினரும் கலந்து கொள்ளலாம்.
போட்டிக்கான கடிதத்தை, எழுதுவதில் உள்ள மகிழ்ச்சி; டிஜிட்டல் யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம் ( The joy of Writing: Importance of Letters in a Digital age) என்ற தலைப்பில், தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி அல்லது ஏதேனும் ஒரு வட்டார மொழியில் வரும் டிச., 14ம் தேதிக்குள், முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு, சென்னை -02 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
கையால் எழுதப்பட்ட கடிதமாக இருக்க வேண்டும். தட்டச்சு செய்யப்பட்ட கடிதங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இன்லேண்ட் லெட்டர் பிரிவில், 500 வார்த்தைகளுக்கு மிகாமலும், என்வலப் பிரிவில் எழுதுவோர், ஆயிரம் வார்த்தைகளுக்கு மிகாமலும் கைப்பட எழுதி தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.
18 வயது நிறைவு பெற்றவர்/ 18 வயது நிறைவு பெறாதவர் என்ற வயது சான்று கடிதத்தில் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். போட்டியில் பங்குபெறுவோரின் பெயர் மற்றும் பள்ளி, இருப்பிட முகவரியை, கடிதத்தில் தவறாமல் குறிப்பிட வேண்டும்.
மாநில அளவில் வெற்றி பெறுவோருக்கு, ஒவ்வொரு பிரிவிலும் (18 வயதுக்குட்பட்டோர், 18 வயது பூர்த்தியடைந்தவர்கள்) முதல் பரிசாக, 25 ஆயிரம், இரண்டாவது பரிசாக, 10 ஆயிரம், மூன்றாவது பரிசாக, 5,000ம், தேசிய அளவில் முதல் பரிசாக, 50 ஆயிரம், இரண்டாம் பரிசாக 25 ஆயிரம், மூன்றாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
பொது மக்கள் மற்றும் மாணவ, மாணவியர் போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு, அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகலாம் அல்லது இந்திய அஞ்சல் துறையின் வலைதளத்தில் 13 செப்.,2024 தேதியில் வெளியிடப்பட்ட கடிதம் எழுதும் போட்டி சம்பந்தப்பட்ட அறிவிப்பை காணலாம்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.