மாணவர்களின் வாசிப்புக்காக உருவாக்கப்பட்டது பட்டம்!
மாணவர்களின் வாசிப்புக்காக உருவாக்கப்பட்டது பட்டம்!
UPDATED : பிப் 14, 2026 11:29 AM
ADDED : பிப் 14, 2026 11:30 AM
பள்ளி முதல்வர்களுக்காக 'தினமலர் - பட்டம்' சார்பில் எழுக கல்வி கருத்தரங்கு சென்னையில் நேற்று நடந்தது.
அதில், 'தினமலர்' நாளிதழின் இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:
'தினமலர்' நாளிதழின் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்தவர். அவர், பத்திரிகை துவங்குவதற்கு முன், உப்பளம் வைத்து உப்பு வியாபாரம் செய்தார். அவரது ஓய்வு நேரத்தில், ஏழை மாணவர்களுக்கு கல்வியை கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டார்.
மாலை பள்ளி
ஒவ்வொரு மாலை நேரத்திலும் பள்ளிக் கூடம் நடத்துவார். அவர் நிறைய சமூகப்பணிகளை செய்தார். அவற்றில் முக்கியமானது கல்விப்பணி தான். அவரைப் போல நிறைய பேர், கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்விப்பணியில் ஈடுபட்டனர். அதனால் தான், கன்னியாகுமரி மாவட்டம் 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக மாறியது.
அதை பின்பற்றி, 'தினமலர்' நாளிதழின் முன்னாள் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, அரசு பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், 'ஜெயித்துக் காட்டுவோம்' என்ற நிகழ்ச்சியை, அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் நடத்தினார்.
அதில், தேர்வில் வெற்றி பெற, மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பின், உயர் கல்விக்கு வழிகாட்ட, 'வழிகாட்டி' என்ற நிகழ்ச்சியை நடத்தினார். அதைத் தொடர்ந்து, தற்போதுள்ள மாணவர்களின் வாசிப்பு திறனை ஆராய்ந்த போது, அவர்களுக்கு பாடப்புத்தகங்களைத் தவிர வேறொன்றும் தரமானதாக கிடைக்கவில்லை என்பதை அறிந்தோம்.
பாடப்புத்தகங்களை மட்டுமே படிப்பது, மாணவர்களுக்கு அயற்சியை தருவதாக அறிந்தோம். அதனால், ஒரு ஜனரஞ்சகமான இதழை அவர்களுக்கு தர வேண்டும் என முடிவு செய்து, 'பட்டம்' மாணவர் இதழை துவக்கினோம்.
அவர்கள் அதை படிக்கும் போது கடினமாக இருக்கக் கூடாது. விரும்பி படிப்பதாகவும், பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் என திட்டமிட்டோம். அதன் உள்ளடக்கத்தில் நாங்கள் மிகவும் கவனமாக உள்ளோம்.
ஆசிரியர் மன்றம்
எங்களின் நோக்கத்திற்கான முழு வெற்றியை நோக்கிய பயணத்தில், மாணவர்களின் மனநிலையையும், கல்வியின் போக்கையும் அறிந்து, அதற்கேற்ப நல்ல செய்திகளை தர வேண்டும் என்பதற்காக, பள்ளி முதல்வர்கள், தாளாளர்களுடன் உரையாட தீர்மானித்தோம்.
தாளாளர்கள், முதல்வர்களை ஒருங்கிணைத்து ஒரு மன்றம் உருவாக்க வேண்டிய தேவையை உணர்ந்தோம். அது, அவர்களுக்கும் பயனளிக்கும் என்பதால், இந்த கருத்தரங்கத்தை நடத்துகிறோம். மாணவர்களின் வெற்றி பயணத்துக்காக தொடர்ந்து பயணிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

