ஏ.ஐ., சவால்களை எதிர்கொள்ள தேர்வு முறையில் மாற்றம் தேவை
ஏ.ஐ., சவால்களை எதிர்கொள்ள தேர்வு முறையில் மாற்றம் தேவை
UPDATED : பிப் 14, 2026 11:30 AM
ADDED : பிப் 14, 2026 11:35 AM

பள்ளி முதல்வர்களுக்காக 'தினமலர் - பட்டம்' சார்பில் எழுக கல்வி கருத்தரங்கு சென்னையில் நேற்று நடந்தது.
அதில், ராஜலட்சுமி கல்வி குழுமங்களின் நிர்வாக இயக்குநர் அபூர்வா ஹரி பேசியதாவது:
'செயற்கை நுண்ணறிவு பயன்பாடு என்பது தொழில்நுட்பம் நிறைந்தது; சிக்கலானது; அச்சுறுத்தும் தன்மை கொண்டது' எனும் கருத்துகள் பரவலாக உள்ளன. அதை, அச்சுறுத்தலாகவோ, அதிசய தீர்வாகவோ அல்லாமல், ஒரு சக்தி வாய்ந்த கருவியாக ஆராய வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு, ஏற்கனவே நம் கல்வி கட்டமைப்புக்குள் நுழைந்துவிட்டது. கடந்த 2019ல், சி.பி.எஸ்.இ., நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு, ஒரு திறன் பயிற்சியாக அறிமுகமானது.
பல மாநில அரசுகள், தனியார் மற்றும் அரசு பள்ளிகளில், செயற்கை நுண்ணறிவு 'லேப்' மற்றும் டிஜிட்டல் கற்றல் முயற்சிகளை துவக்கி உள்ளன.
டிஜிட்டல் உதவியாளர்
வகுப்பறையில், 40 முதல் 50 மாணவர்களை கவனிக்கும் ஒரு ஆசிரியருக்கு, செயற்கை நுண்ணறிவு, ஒரு சிறந்த உதவியாளராக செயல்படும்.
ஒவ்வொரு மாணவரின் கற்றல் திறனுக்கேற்ப, ஒரு சில வினாடிகளில், 'ஒர்க் ஷீட்' எனும் பணித்தாள்களை உருவாக்க முடியும்.
இதனால், தனிப் பயனாக்கப்பட்ட கல்வி கிடைக்கும். ஆங்கிலத்தில் சிரமப்படும் மாணவர்களுக்கு, உடனடி மொழி உதவியை வழங்குகிறது.
வருகைப் பதிவு, கால அட்டவணை தயாரிப்பு, அறிக்கைகளை உருவாக்குவது உள்ளிட்ட பணிகளை, செயற்கை நுண்ணறிவே மேற்கொள்வதால், நிர்வாக சுமை குறையும். ஆசிரியர்களும், முதல்வர்களும், கல்வி தரத்தை மேம்படுத்துவதில், கூடுதல் கவனம் செலுத்த முடியும்.
எச்சரிக்கை
கல்வி என்பது, ஒரு ஆரோக்கியமான, போராட்டமான சிந்தனை முறை. அதை செயற்கை நுண்ணறிவிடம் ஒப்படைத்துவிட்டால், மாணவர்களின் பகுத்தறியும் திறன் மற்றும் அறிவாற்றல் சகிப்புத்தன்மை பலவீனமடைய வாய்ப்புள்ளது.
கட்டுரைகளை எழுதவும், கணக்குகளை தீர்க்கவும், மாணவர்கள் செயற்கை நுண்ணறிவை மட்டுமே நம்பியிருந்தால், அவர்களின் சுய சிந்தனை மழுங்கிவிடும் அபாயம் உள்ளது.
மாற்றம் அவசியம்
இந்த சவால்களை எதிர்கொள்ள, நம் தேர்வு முறைகளில் மாற்றம் செய்ய வேண்டும். முக்கியமாக, வெறும் எழுத்து தேர்வுகளுக்குப் பதில், வாய்மொழி தேர்வுகள், கையால் எழுதப்பட்ட பகுப்பாய்வு தேர்வுகள், திட்ட அடிப்படையிலான மதிப்பீடுகள், செயற்கை நுண்ணறிவு சார்ந்த விவாதங்கள் என மாற்ற வேண்டியது அவசியம்.
மாற்று அல்ல
செயற்கை நுண்ணறிவு, ஆசிரியர்களின் திறனைப் பெருக்கும் ஒரு கருவி மட்டுமே; அது, எப்போதும் ஆசிரியர்களுக்கு மாற்றாக அமையாது.
அப்போது தான், தொழில்நுட்பத்தை சரியான முறையில் கையாண்டு, கல்வியின் ஆன்மாவான, ஆசிரியர் - மாணவர் இடையிலான உறவு சிதையாமல் காப்பதே, அடுத்த சந்ததிக்கு நாம் செய்யும் நன்மை. இவ்வாறு அவர் பேசினார்.

