நீட் தேர்வில் 10 சதவீதம் இடஒதுக்கீடு செய்ய கோரிக்கை
நீட் தேர்வில் 10 சதவீதம் இடஒதுக்கீடு செய்ய கோரிக்கை
UPDATED : ஆக 10, 2026 03:44 PM
ADDED : ஆக 10, 2026 03:45 PM
நாமக்கல்:
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, 'நீட்' தேர்வில், 10 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, இந்திய மாணவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
நாமக்கல்லில், இந்திய மாணவர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் மிருதுளா தலைமை வகித்தார். மாநில செயலாளர் சம்சீர் அகமது கலந்துகொண்டு பேசினார். அப்போது, “அனைத்து மாவட்டங்களிலும் அரசு சட்டக்கல்லுாரி, இன்ஜினியரிங் கல்லுாரி அமைக்க வேண்டும்.
அரசு மருத்துவமனை மாணவர்களின், உணவுப்படி தொகையை உயர்த்த வேண்டும். 'நீட்' தேர்வுக்கு விலக்கு பெறும் வரை, அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு, 10 சதவீதம் தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை, முதல்வரிடம் மனுவாக அளித்திருந்தோம். ஆனால், நாங்கள் வழங்கிய எந்த கோரிக்கைகளுக்கும் பதில் இல்லாமல், பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது.
'நீட்' தேர்வுக்கு எதிராக வரும் ஆக., 20 முதல், 30 வரை தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில், 'நீட்' விலக்கு குறித்து பிரசாரம் செய்ய உள்ளோம். செப்., 1 அனிதா நினைவு தினத்தில், தமிழகத்தில் உள்ள, 10 மையங்களில் பேரணி, திறந்தவெளி கருத்தரங்கம் நடத்த உள்ளோம்,” என்றார்.
