தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்ஜினியர்கள் தேவை உலகளவில் அதிகரிப்பு: வெளிநாட்டு மொழிகளையும் மாணவர்கள் கற்பது அவசியம்

இன்ஜினியர்கள் தேவை உலகளவில் அதிகரிப்பு: வெளிநாட்டு மொழிகளையும் மாணவர்கள் கற்பது அவசியம்

இன்ஜினியர்கள் தேவை உலகளவில் அதிகரிப்பு: வெளிநாட்டு மொழிகளையும் மாணவர்கள் கற்பது அவசியம்


UPDATED : ஜூன் 15, 2025 12:00 AM

ADDED : ஜூன் 15, 2025 09:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 15, 2025 12:00 AM ADDED : ஜூன் 15, 2025 09:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
உலகளவில் இன்ஜினியர் வேலைவாய்ப்புகள் அதிகரித்து இருப்பதால், மற்ற நாட்டு மொழிகளையும் கற்பது அவசியம் என சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தலைவர் ஸ்ரீராம் பேசினார்.

அண்ணா பல்கலை கல்லுாரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் உள்ள, பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்கள், 'ஆன்லைன்' கவுன்சிலிங் வாயிலாக நிரப்பப்படுகின்றன.

இந்த கவுன்சிலிங்கை, டி.என்.இ.ஏ., என்ற இணையதளத்தின் வாயிலாக, தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்துகிறது.

இந்நிலையில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு, கவுன்சிலிங் குறித்து வழிகாட்டும் வகையில், தினமலர் நாளிதழ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்துடன் இணைந்து, இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சியை நேற்று நடத்தியது.

சென்னை தி.நகர் வாணி மகாலில் காலை, 10:00 முதல் பகல் 1:00 மணி வரையிலும், குன்றத்துார் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி வளாகத்தில், மாலை 3:00 முதல் 6:00 மணி வரையிலும், இந்நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதில், ஆன்லைன் கவுன்சிலிங் நுணுக்கங்கள், சரியான சாய்ஸ் பில்லிங் பதிவிடுவதற்கான வழிமுறைகள், புரொவிசனல் அலாட்மென்ட் பெறுதல், இந்தாண்டு கொண்டு வரப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் மற்றும் மாணவர்கள், பெற்றோர் சந்தேகங்கள் உள்ளிட்டவற்றுக்கு, இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை செயலர் டி.புருஷோத்தமன் விளக்கம் அளித்தார்.

எந்த கட் ஆப் மதிப்பெண்ணுக்கு, எந்த கல்லுாரியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது; நவீன தொழில்நுட்ப படிப்புகளில் உள்ள வாய்ப்புகள் என்னென்ன; 'கோர்' இன்ஜினியரிங் துறைகளின் எதிர்காலம் உள்ளிட்டவை குறித்து, கல்வி ஆலோசகர் ஆர்.அஸ்வின், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தலைவர் பி.ஸ்ரீராம் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், இரண்டு இடங்களிலும் தலா, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோர் பங்கேற்றனர். அப்போது, கல்வி ஆலோசகர்கள் வழங்கிய ஆலோசனை மற்றும் விளக்கங்களை பெரும்பாலான மாணவர்கள், பெற்றோர், குறிப்பு எடுத்து கொண்டனர். மேலும், அவர்களுக்கு எழுந்த கேள்விகளையும் கேட்டு பதிலை பெற்றனர்.

தொடர்ந்து, இன்ஜினியரிங் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், மாநிலம் முழுதும், 16 இடங்களில், தினமலர் நாளிதழ் சார்பில், வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

நிகழ்ச்சியில், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தலைவர் ஸ்ரீராம் பேசியதாவது:

தினமலர் நாளிதழ் தொடர்ந்து, 15 ஆண்டுகளாக, மாணவர்கள் உயர் படிப்புகளில் சேருவதற்கான வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதற்காக, தினமலர் நாளிதழுக்கு நன்றி.

இந்தாண்டு இன்ஜினியரிங் படிப்புக்கு, 3 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து, 2.49 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர். ஒரு காலத்தில், இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களின் மோகம் படிப்படியாக குறைந்து காணப்பட்டது. குறிப்பாக, 80,000 மாணவர்கள் தான் இன்ஜினியரிங் படிப்புக்கு விண்ணப்பித்த நிலையில், தற்போது எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஒரு காலத்தில் குறிப்பிட்ட சில பணிகளுக்கு மட்டுமே இன்ஜினியரிங் தேவை இருந்தது. தற்போது, பல்வேறு நாடுகளிலும் இன்ஜினியரிங் தேவை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, சீனா, ஜப்பான், ஜெர்மனி, தைவான் உள்ளிட்ட நாடுகளில், உற்பத்தி போன்ற பலவற்றில், இன்ஜினியரிங் தேவை அதிகமாக உள்ளது. அவர்கள் இந்தியர்களை வேலையில் சேர்க்க தயாராக உள்ளனர். எனவே, தமிழ், ஆங்கில மொழியுடன், மற்ற நாட்டு மொழிகளையும் கற்பது அவசியம்.

முன்பெல்லாம் மாணவர்கள், மூன்றாம் ஆண்டு படித்த பின் தான், வேலைவாய்ப்புக்கான பயிற்சி வழங்கப்பட்டது. ஆனால், மாணவர்களிடம் புதிய கண்டுப்பிடிப்புகள், பிரச்னைக்கு தீர்வு அளிக்கும் ஆற்றல் இருந்தால் மட்டுமே, அவர்களால் சாதிக்க முடியும்.

எனவே, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மாணவர்களுக்கு மேம்பட்ட கல்வியை வழங்குகிறது. ஒவ்வொரு மாணவரும் படித்து முடித்து செல்லும்போது, ஐந்து விதமான திறன் பெறுவது அவசியம். தங்களது, பயோடேட்டாவில், அவற்றை குறிப்பிடுவதும் முக்கியம். குறிப்பாக, அறிவாற்றால், சான்றிதழ், திட்டம், பயிற்சி, சாதனை ஆகிய ஐந்தும் குறிப்பிட வேண்டும்.

உங்களிடம் பிரச்னைகளை தீர்க்கும் ஆற்றல் இருக்கிறதா என்பதை, நிறுவனங்கள் தேடுகின்றன. அது இருந்தால் வெற்றி கிடைக்கிறது.

மேலும், தினமலர் நாளிதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூப் ஆப் டெக்னாலஜி இணைந்து, எங்கள் கல்லுாரியில் சேருபவர்களுக்கு, கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் கல்வி உதவி தொகையும் வழங்கப்படும். அதன்படி, 5 லட்சம் ரூபாய் வரை கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது.

கடந்த 2022 முதல் மூன்று ஆண்டுகளாக, இன்ஜினியரிங் துறையில் மாணவர்கள் விரும்பி தேர்வு செய்யும் கல்லுாரிகளில், சென்னை இன்ஸ்டிடியூப் ஆப் டெக்னலாஜி இரண்டாவது இடத்தில் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

ஏ.ஐ., விட ஆற்றல் மிக்கவர்களாக இருப்பது அவசியம்


செயற்கை நுண்ணறிவை விட, திறன் ஆற்றல் மிக்கவர்களாக மாணவர்கள் தங்களை மேம்படுத்தி கொள்ள வேண்டும், என கல்வி ஆலோசகர் அஸ்வின் பேசினார்.

அஸ்வின் பேசியதாவது:



பிளஸ் 2 முடித்த பின் மாணவர்களுக்கு, மொபைல் போன், மடிக்கணினியை, பெற்றோர் வாங்கி தந்து இருப்பர். இவற்றை ஒவ்வொரு மாணவரும் பயன் பெறும் வகையில் பயன்படுத்தினால் மட்டுமே சாதிக்க முடியும். சில பெற்றோர், பைக் வாங்கி தருகின்றனர். இதனால், எவ்வித பயனும் மாணவர்களுக்கு இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மாணவர்கள் எந்த கல்லுாரியில் சேர்ந்தாலும், முதல் மூன்று ஆண்டுகளில் தங்கள் இன்ஜினியரிங் பிரிவில் திறன் பெற்றவர்களாக இருத்தல் அவசியம். நிறுவனங்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், மாணவர்கள் திறனை மேம்படுத்தி கொள்ள வேண்டும். இதற்கான பயிற்சி, கல்வி திறன் ஆகியவற்றை முதல் மூன்று ஆண்டுகளிலேயே கற்றுக் கொண்டிருக்க வேண்டும். சி பிளஸ் பிளஸ், ஜாவா ஆகியவை பழைய படிப்பு என நினைக்கின்றனர்.

ஆனால், அதனுடைய அடிப்படை அறிவுத்திறன், கோடிங் போன்றவை மிகவும் முக்கியமானவை. செயற்கை நுண்ணறிவு திறன் என்ற ஏ.ஐ., கோடிங் வந்தாலும், அதை விட புதிய கண்டுபிடிப்புகள், கோடிங் முறையை உருவாக்கும் வகையிலான ஆற்றலை நாம் பெற்றிருக்க வேண்டும். கோடிங் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், 2,836 லீட் கோட் உள்ளன. அவற்றில் பலவற்றை தீர்வு கண்டு தேர்ச்சி பெற்றிருந்தால், பெரிய நிறுவனங்கள் உங்களுக்கு வேலைவாய்ப்பை தரும். மேலும், கேட் தேர்வை எழுதி தேர்ச்சி பெறுவது முக்கியம். வட மாநிலங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும். எனவே, தமிழ், ஆங்கிலம் போல், ஹிந்தி மொழி கற்பதும் அவசியம்.

இன்ஜினியரிங் துறையில், இ.சி.இ., இ.இ.இ., மெக்கானிக்கல், சிவில் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு மாணவர்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதில், சிவில் படிப்பவர்களுக்கு தனியாரில் வேலை வாய்ப்பு குறைவாக இருந்தாலும், மத்திய, மாநில அரசு நிறுவனங்களில், ஏராளமான வேலை வாய்ப்புகள்ள உள்ளன.அதேபோல், 'இந்தியன் இன்ஜினியரிங் சர்வீசஸ்' தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால், இந்தியாவில் உயர்ந்த பொறியியல் சார்ந்த பதவிகளுக்கு செல்ல முடியும். மாதம் 2 லட்சம் ரூபாய் சம்பளத்துடன், பல்வேறு சலுகைகளையும் அனுபவிக்க முடியும்.அதற்கான திறன் உங்களிடம் இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும்.

கட் ஆப் மதிப்பெண் அதிகம் எடுத்த மாணவர்களும், தரம் குறைந்த கல்லுாரிகளில் சேர்கின்றனர். இதற்கு, கல்லுாரிகளால் ஏற்படுத்தப்படும் விளம்பர மாயை காரணமாக இருக்கலாம்.எனவே, கல்லுாரிகளில் சேர்வதற்கு முன், கல்லுாரியை நேரடியாக சென்று பாருங்கள். அங்குள்ள, லேப் ஆகியவற்றை பார்வையிடுவதுடன், படித்தவுடன் அங்கு வேலைவாய்ப்பு எப்படி உள்ளது போன்றவற்றை, அங்கு படிக்கும் மாணவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.இதுபோன்றவற்றால் தான், சிறந்த கல்வி நிறுவனத்தை தேர்வு செய்ய முடியும். அதன்பின், வாழ்க்கையிலும் முன்னேற முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us