டாப் 100 தகுதி பட்டியலில் 6 தமிழக மாணவர்கள்... நீட் தேர்வில் சாதனை!
டாப் 100 தகுதி பட்டியலில் 6 தமிழக மாணவர்கள்... நீட் தேர்வில் சாதனை!
UPDATED : ஜூன் 15, 2025 12:00 AM
ADDED : ஜூன் 15, 2025 09:24 AM

 சென்னை: 
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தகுதி தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் டாப் 100 தகுதி பட்டியலில் தமிழக மாணவர்கள் ஆறு பேர் இடம் பிடித்துள்ளனர். இதில் திருநெல்வேலி மாணவர் சூரியநாராயணன் தேசிய அளவில் 27வது இடத்தையும் மாநில அளவில் முதலிடமும் பெற்று அசத்தியுள்ளார்.
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகள், எய்ம்ஸ், மத்திய கல்வி நிறுவனங்கள், நிகர்நிலை பல்கலைகளில், எம்.பி.பி.எஸ்.,  பி.டி.எஸ்.,  சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, நீட் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறுகிறது. அத்துடன், கால்நடை மருத்துவ படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், ராணுவ கல்லுாரிகளில் உள்ள பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளுக்கும், நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதற்கான தேர்வை, தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
இந்தாண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. நாடு முழுதும் 9 லட்சத்து 37,411 ஆண்கள்; 12 லட்சத்து, 71,896 பெண்கள்; 11 மூன்றாம் பாலினத்தவர் என 22 லட்சத்து 9318 பேர் தேர்வு எழுதியிருந்தனர். அவர்களில் 5 லட்சத்து 14,063 ஆண்கள்; 7 லட்சத்து 22,462 பெண்கள்; ஆறு மூன்றாம் பாலினத்தவர் என 12 லட்சத்து 36,531 மாணவர்கள் அதாவது 55.96 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டை விட, 0.45 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது.
தமிழகத்தில் ஒரு லட்சத்து 35,715 பேர் நீட் தேர்வு எழுதியதில், 76,181 பேர், அதாவது, 56.13 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2024ல், தேர்ச்சி சதவீதம் 58.47 ஆகவும், தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை, 89,199 ஆகவும் இருந்தது. இந்த ஆண்டு தேர்ச்சி, 2.34 சதவீதம் குறைந்துள்ளது.
மொத்தம், 720 மதிப்பெண்களுக்கு நடந்த தேர்வில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ்குமார், 686 மதிப்பெண்களுடன், தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மத்திய பிரதேசத்தை சேர்ந்த உத்கர்ஷ் அவதியா, மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த கிரிஷாங் ஜோஷி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளனர்.
தமிழகத்தில், திருநெல்வேலியை சேர்ந்த எஸ்.சூர்யநாராயணன், 665 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் முதலிடமும், தேசிய அளவில், 27வது இடமும் பிடித்துள்ளார். இவருடன் அபினித் நாகராஜ், புகழேந்தி, ஹிருத்திக் விஜயராஜா, ராகேஷ், பிரஜன் ஸ்ரீவாரி ஆகிய ஆறு தமிழக மாணவர்கள், டாப் 100 இடங்களில் இடம் பெற்றுள்ளனர்.
தாத்தா, தந்தை எதிர்ப்பு பேரன் பங்கேற்பு
திருநெல்வேலி புஷ்பலதா வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ., பள்ளியில் படித்த பிளஸ் 2 மாணவர் அவனிஷ் பிரபாகர், நீட் தேர்வில் 608 மதிப்பெண் பெற்று, தேசிய அளவில், 922வது இடத்தைப் பிடித்துள்ளார்.இவர் முன்னாள் சபாநாயகரும், தற்போது திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலருமான ஆவுடையப்பன் பேரன். மாணவனின் தந்தை ஆ.பிரபாகரன், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளார்.தி.மு.க.,வினர், நீட் தேர்வுக்கு எதிராக, மாநில அளவில் போராட்டங்கள் நடத்தினாலும், அவர்களது வீட்டு பிள்ளைகள், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படித்து, நீட் தேர்வில் வெற்றி பெற்று வருகின்றனர் என்பது, இதன் வாயிலாக உறுதியாகி உள்ளது.
முழு மதிப்பெண் இல்லை
கடந்தாண்டு நீட் தேர்வில், 67 மாணவர்கள் முழு மதிப்பெண் எடுத்தனர். இந்த விவகாரம் சர்ச்சையானது. இந்த முறை தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்ததால், எந்த மாணவரும் முழு மதிப்பெண்ணான, 720 எடுக்கவில்லை. ராஜஸ்தான் மாணவர், 686 மதிப்பெண் எடுத்ததே அதிகபட்சமாக உள்ளது. மேலும், 720 மதிப்பெண்களுக்கு, 651 முதல் 686 மதிப்பெண்களை, 73 மாணவர்களும், 601 முதல் 650 வரை, 1,259 மாணவர்களும் பெற்றுள்ளனர்.
இடஒதுக்கீடு வாரியாக தகுதி விபரம்
பொதுப்பிரிவு - 3,38,728
ஓ.பி.சி., - 5,64,611
எஸ்.சி., - 1,68,873
எஸ்.டி., - 67,234
இ.டபிள்யூ.எஸ்., - 97,085
மாற்றுத்திறனாளிகள் - 3,673
இரண்டு ஆண்டுகள் தேர்ச்சி விபரம்
ஆண்டு - விண்ணப்பித்தோர் - தேர்வு எழுதியோர் - தகுதி பெற்றோர்
2024 - 24,06,079 - 23,33,162 - 13,15,853
2025 - 22,76,069 - 22,09,318 - 12,36,531
தேர்வு எழுதியோர் விபரம்
ஆண்டுகள் - விண்ணப்பித்தோர் - தேர்வு எழுதியோர்
2019 - 15,19,375 - 14,10,755 
2020 - 15,97,435 - 13,66,945
2021 - 16,14,777 - 15,44,273
2022 - 18,72,343 - 17,64,571
2023 - 20,87,462 - 20,38,596
2024 - 24,06,079 - 23,33,297
2025 - 22,76,069 - 22,09,318
தமிழில் குறைவு
நீட் தேர்வு, ஆங்கிலம், தமிழ், மலையாளம் உள்ளிட்ட, 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. அதன்படி, 2022ல், 31,965 பேர், 2023ல், 30,536 பேர், 2024ல், 36,335 பேரும் தமிழில் தேர்வு எழுதினர். இந்தாண்டு, 26,580 பேர் மட்டுமே தமிழ் மொழியில் தேர்வு எழுதியுள்ளனர்.
சிறந்த டாக்டர்கள் உருவாக தேர்வு அவசியம்
திருநெல்வேலி, புஷ்பலதா வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர் சூரிய நாராயணன், பிளஸ் 2 தேர்வில், 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்றார். ஜே.இ.இ., அட்வான்ஸ் தேர்வில், 388வது ரேங்க், ஜே.இ.இ., மெயின் தேர்வில் 299 ரேங்க் பெற்றுள்ளார்.திருநெல்வேலி மகாராஜநகரில் வசிக்கும் இவரது தந்தை சங்கர சுப்பிரமணியன், ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றுகிறார். தாய் சுப்புலட்சுமி. சூரிய நாராயணனை பள்ளி தாளாளர் புஷ்பலதா பூரணன், முதன்மை முதல்வர் புஷ்பவேணி அய்யப்பன் பாராட்டினர்.
சூரியநாராயணன் கூறியதாவது:
எல்.கே.ஜி., முதல், இதே பள்ளியில் படித்தேன். மாநில, மெட்ரிக் பாடத்திட்டங்களை விட, நீட் தேர்வுக்கு சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் சிறந்தது. வீட்டிலும் பெற்றோர் எப்போதும் தன்னம்பிக்கை அளிப்பர். அலைபேசி அதிகம் பார்ப்பதில்லை. சமூக வலைதளத்திலும் ஆர்வம் இல்லை.  வீட்டு பாடங்களை அன்றன்று செய்து விடுவேன். இரவு நீண்ட நேரம் படிப்பேன். பள்ளியிலேயே, 150-க்கும் மேற்பட்ட மாதிரி தேர்வுகள் நடத்தினர். நீட் தேர்வு வேண்டாம் எனக் கூற முடியாது. இதுபோன்ற தேர்வுகள் இருந்தால் தான் சிறந்த டாக்டர்கள் உருவாக முடியும். டில்லி எய்ம்ஸ் கல்லுாரியில் படித்து நரம்பியல் அல்லது இதயவியல் மருத்துவ நிபுணர் ஆவேன். 
இவ்வாறு அவர் கூறினார்.

