புதுச்சேரி வரலாற்று சிறப்புகளை பாடத்திட்டத்தில் இணைக்க கோரிக்கை
புதுச்சேரி வரலாற்று சிறப்புகளை பாடத்திட்டத்தில் இணைக்க கோரிக்கை
UPDATED : ஜூலை 26, 2026 07:03 PM
ADDED : ஜூலை 26, 2026 07:05 PM
புதுச்சேரி:
புதுச்சேரி வரலாற்று, பிரெஞ்சு நாட்டின் தொன்மையான தொடர்பு மற்றும் கலாசாரத்தை தமிழக பாடத்திட்டத்தில் இணைக்க கோரி, பாரதி அறக்கட்டளையின் நிறுவன தலைவர் ராஜகோபால் தமிழக அமைச்சர் ராஜ்மோகனிடம் மனு அளித்தார்.
மனுவில், தமிழகமும் புதுச்சேரியும் மொழி, பண்பாடு, வாழ்வியல் முறைகள் மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தால் பிணைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் உள்ள பள்ளிகள் தமிழக அரசின் மாநில பாடத் திட்டத்தையே பின்பற்றி வருகின்றன. எனவே, பாட நுால்களில் புதுச்சேரி பற்றிய சிறப்புக் கட்டுரைகளைச் சேர்ப்பது இரு மாநில மாணவர்களுக்கும் பெரும் பயனளிக்கும்.
தேசியக் கல்விக் கொள்கை வழிகாட்டுதலின்படி, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் இருந்து பிரெஞ்சு மொழியை நீக்க முற்படுவது, புதுச்சேரியின் தனித்துவமான நான்கு மொழி அமைப்பை கடுமையாகப் பாதிக்கும்.
புதுச்சேரி மக்களின் மொழி உரிமையையும், வரலாற்றுப் பெருமையையும் காக்க, தமிழக அரசு தனது ஆதரவுக் குரலை உயர்த்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்று கொண்ட அமைச்சர் ராஜ்மோகன், புதுச்சேரியின் வரலாற்று முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, பாடத்திட்டத்தில் இணைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
