UPDATED : ஏப் 25, 2024 12:00 AM
ADDED : ஏப் 25, 2024 10:31 AM

கடலுார்:
தினமலர் நாளிதழ், ஸ்காலர் ஸ்பெக்ட்ரா நிறுவனத்துடன் இணைந்து நடத்தும், நீட் மாதிரி தேர்வு, வரும் 28 ம்தேதி கடலுாரில்பிரமாண்டமாக நடக்கின்றது.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவப் படிப்புகளுக்கான, நீட் தேர்வு, மே 5ம் தேதி நாடு முழுவதும் நடக்கிறது. இந்தியா முழுதும் லட்சக்கணக்கான மாணவர்கள் இந்த தேர்வை எழுத தயாராகி உள்ளனர்.
தமிழகம், புதுச்சேரியில் நீட் நுழைவு தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் டாக்டர் கனவினை நிறைவேற்றிட தினமலர் நாளிதழ், ஸ்காலர் ஸ்பெக்ட்ரா நிறுவனத்துடன் இணைந்து, நீட் மாதிரி தேர்வை நடத்த உள்ளது.
இந்த மாதிரி தேர்வு வரும் 28ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 1:20 மணி வரை, கடலுார் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் கலை அறிவியல் கல்லுாரி வளாகத்தில் பிரமாண்டமாக நடக்க உள்ளது.
இந்த மாதிரி நுழைவு தேர்வில் பதிவு செய்துள்ள கடலுார் மாவட்ட மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளனர். இது மாதிரி நீட் தேர்வு என்றாலும், தேசிய தேர்வு முகமை நடத்தும் அசல் தேர்வு போன்றே நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே தேசிய தேர்வு முகமை விதித்துள்ள கட்டுப்பாடுகள் அனைத்துமே தினமலர்- நீட் மாதிரி நுழைவு தேர்விலும் பின்பற்றப்பட உள்ளது. எனவே நீட் தேர்வில் பங்கேற்பதற்கான சிறந்த அனுபவத்தை தினமலர் மாதிரி தேர்வில் பங்கேற்பதன் மூலம் பெற முடியும்.
தமிழிலும்...
நீட் நுழைவு தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்காளம், உருது உள்பட 13 மொழிகளில் எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என்றாலும், தினமலர்- நீட் மாதிரி நுழைவு தேர்வு 3.20 மணி நேரம் இடைவிடாது ஆங்கிலம் மற்றும் தமிழிலும் நடக்கிறது. தேர்வு நேரம் முடியும் முன் வெளியே செல்ல அனுமதி இல்லை.
அச்சம் போகும்
பொதுவாக நீட் தேர்வினை கண்டு மாணவர்கள் மத்தியில் அச்சம் உள்ளது. பொதுவாக பள்ளிகளில் நடைபெறும் தேர்வு என்பது பாடங்களை முழுமையாகப் படித்திருக்கிறார்களா என்று சோதிக்கும் வகையில் அமையும். ஆனால் நீட் நுழைவுத் தேர்வு என்பது பாடத்திட்டத்தை முழுவதும் அறிந்து, புரிந்து வைத்திருக்கிறார்களா என்று சோதிக்கும் வகையில் இருக்கும்.
குறிப்பாக பாடங்களின் கோட்பாடுகள், காரண காரியங்கள் பாடம் சார்ந்த ஆழமான அறிவு, பாடம் தொடர்பான பிரதியீடுகள் இவையெல்லாம் மாணவர்களுக்குத் தெரிகிறதா என்று எடை போடுவதுபோல நீட் நுழைவு தேர்வு அமைந்திருக்கும்.
அதற்கேற்ப மாணவர்கள் தங்களைத் தயார் செய்துகொள்ளுவதன் மூலம் நீட் தேர்வில் அகில இந்திய அளவில் டாப் ரேங்கில் வந்து சாதிக்கலாம். அதற்கு சிறந்த தளத்தினை 'தினமலர்' நாளிதழ் மாதிரி நுழைவு தேர்வு மூலம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
அதுவும் நீட் தேர்விற்கு பல ஆண்டுகளாக பயிற்சி அளித்து வரும் அனுபவம் வாய்ந்த சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, ஒவ்வொரு கேள்விகளும் வடிவமைக்கப்பட்டுள்ளதால், தேசிய தேர்வு முகமையில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்து காத்திருக்கும் மாணவர்களுக்கு தினமலரின் நீட் மாதிரி தேர்வு தங்களை சுயமாக பரிசோதித்துக் கொள்ள அரிய வாய்ப்பு.
எனவே பதிவு செய்த மாணவர்கள் மிஸ் பண்ணாம பெற்றோருடன் வாங்க...