UPDATED : மார் 07, 2026 01:08 PM
ADDED : மார் 07, 2026 01:09 PM
அரவக்குறிச்சி:
அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பேரிடர் மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் சாகுல் அமீது வரவேற்றார். அரவக்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலர் ராதாகிருஷ்ணன், மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்து பயிற்சி அளித்து பேசுகையில், தீ விபத்து ஏற்படும் காரணங்கள், அவற்றை தடுக்கும் முறைகள் குறித்து விளக்கினார்.எல்.பி.ஜி., சிலிண்டரை எப்போதும் நேராக நின்ற நிலையில் வைத்திருக்க வேண்டும், வாயு வாசனை தெரிந்தால் உடனடியாக ஜன்னல் மற்றும் கதவுகளை திறந்து பெரியவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், என அறிவுறுத்தினார்.
தீ விபத்து உள்ளிட்ட அவசர நிலைகளில் தொடர்பு கொள்ள வேண்டிய அவசர உதவி எண் 112 மற்றும் அரவக்குறிச்சி தீயணைப்பு நிலைய தொலைபேசி எண் 04320 - 230071 ஆகியவற்றையும் மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை மகிழ்முற்ற செயலர் ஷகிலா பானு ஒருங்கிணைத்து நன்றி கூறினார்.

