பள்ளிகளில் தரம் பிரித்து குப்பை சேகரிக்க நீலம், பச்சை நிற தொட்டிகள் வினியோகம்
பள்ளிகளில் தரம் பிரித்து குப்பை சேகரிக்க நீலம், பச்சை நிற தொட்டிகள் வினியோகம்
UPDATED : செப் 06, 2024 12:00 AM
ADDED : செப் 06, 2024 11:03 AM

கோவை:
கோவை மாநகராட்சி பள்ளிகளில் குப்பையை தரம் பிரித்து சேகரிக்க, அனைத்து வகுப்பறைகளுக்கும் நீலம் மற்றும் பச்சை நிற தொட்டிகள் நேற்று வழங்கப்பட்டன.
கோவை மாநகராட்சி பகுதியில் நாளொன்றுக்கு, 1,150 டன் குப்பை சேகரமாகிறது. இவற்றை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிக்க மாநகராட்சி சுகாதாரப் பிரிவு முயற்சித்து வருகிறது. வீடு வீடாகச் சென்று தரம் பிரித்து சேகரிக்கப்படுகிறது. இதை மாணவர்கள் மனதில் ஆழமாக பதிய வைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில், ஒவ்வொரு வகுப்பறையிலும் நீலம் மற்றும் பச்சை நிற குப்பை தொட்டிகள் வைக்க அறிவுறுத்தப்பட்டது.
மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில், 148 பள்ளிகள் உள்ளன. இங்கு, 1,530 வகுப்பறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு வகுப்பறைக்கும் இரண்டு வீதம் மொத்தம், 3,060 குப்பை தொட்டிகள், நான்கு லட்சத்து, 33 ஆயிரத்து, 296 ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்டன. அவை, அந்தந்த பள்ளிகளுக்கு நேற்று வழங்கப்பட்டன. மாநகராட்சி சிட்டி மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், மாநகராட்சி கல்வி குழு தலைவர் மாலதி, மாநகராட்சி கல்வி அலுவலர் (பொ) குணசேகரன் ஆகியோர் பங்கேற்று, நீலம் மற்றும் பச்சை நிற குப்பை தொட்டிகளை, ஆசிரியர்களிடம் வழங்கினர்.