பள்ளி செல்லும் முன்பே மாணவரிடம் சுமைகளை திணிக்காதீர்!!
பள்ளி செல்லும் முன்பே மாணவரிடம் சுமைகளை திணிக்காதீர்!!
UPDATED : மே 27, 2025 12:00 AM
ADDED : மே 27, 2025 10:10 AM

திருப்பூர்:
ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி செல்லும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவருக்கு இப்போதிருந்தே சுமையை திணிக்காதீர்; பொறுப்பை உணரும் வகையில் எடுத்துச் சொல்லுங்கள். முதன்முறை பள்ளி செல்லும் குட்டீஸ்களை பெற்றோர் தயார்படுத்துங்கள் என, மனநல ஆலோசகர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மனநல சிறப்பு பிரிவு டாக்டர் சஞ்சய் போஸ் கூறியதாவது:
ஒன்பது, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 முடித்து பிளஸ் 2 செல்லும் உங்கள் குழந்தைகளிடம், நீ இந்த வருஷம் பத்தாவது, பிளஸ் 2 இவ்வளவு மார்க் வாங்கினால் தான்; அடுத்து இந்த படிப்புக்கு போக முடியும்; இப்படி வேலை வாங்க முடியும் என கல்வியாண்டு துவக்கத்திலேயே சுமையை திணிக்காதீர்கள். இனிமே, மொபைல் போன் தொடவே கூடாது; டிவி கட் தான்; கேபிள் கிடையாது என, கட்டுப்பாடுகளை துவக்கத்திலேயே கடுமையாக்காதீர்.
முதல் ஒரு மாதம் பள்ளிக்கு சென்ற பின், பள்ளி எப்படி, ஆசிரியர் எப்படி, அடுத்து வருகிறது காலாண்டுத்தேர்வு, இதில் நீ இவ்வளவு மார்க் வாங்கிக்காட்டுவாய்; உனக்கு நீ எதிர்பார்க்கும் பரிசு காத்திருக்கு என ஊக்கப்படுத்துங்கள். அப்போது தான், அரையாண்டில் கூடுதல் மார்க் வாங்க முயற்சி எடுப்பார். படிப்பதற்கு நேரம் வரையறை செய்வதை போல், பிற பொழுது போக்குக்கும் நேரம் அவர்களிடம் ஆலோசித்து வரையறை செய்யுங்கள். பொதுத்தேர்வு கடினம்; படிப்பது சிரமம் என சொல்லாமல், புரியும் வகையில் எடுத்துக் கூறுங்கள். அப்போது தான் அவர்களும் பொறுப்புகளை உணர்வர்.
ஒரு பள்ளியை விட்டு மற்றொரு பள்ளியில் சேர்ப்பவர்கள் வகுப்பாசிரியர், தலைமை ஆசிரியர், சக மாணவ, மாணவியர் எப்படி என்பதை தாய், தந்தை கேட்டு தெரிந்து கொண்டு வழிகாட்ட வேண்டும். முதன்முறை குட்டீஸ்களை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பிகிறீர்கள் என்றால், உன்னை ஸ்கூலுக்கு கொண்டு போய் விட்டுருவேன் என மிரட்டாதீர்கள்; இப்போதிருந்தே மனதுக்குள் ஒரு பயம் வந்து விடும்.
நீ போற ஸ்கூல்ல துாரி, சறுக்கல் எல்லாம். நல்லா ஜாலியா விளையாடலாம். புதுசா பிரண்ட்ஸ் வருவாங்க என, சொல்லிப் பழக்குங்கள். பிரிகேஜி., எல்.கே.ஜி., செல்லும் குழந்தைகள் அதிகமாக பெற்றோர், உறவுகளை விட்டு பிரிந்து இருந்திருக்க மாட்டார்கள். பள்ளிக்கு சென்ற பின் காலை முதல் மாலை வரை அப்படியே விட்டு விடக்கூடாது. மதிய வேளையில் வாய்ப்பிருந்தால் சென்று சந்திக்கலாம்; தாத்தா, பாட்டிகள் கூட பார்க்கலாம்.
சில நாட்கள் அவர்கள் விருப்பத்துக்கு விளையாட்டு, உணவு தர வேண்டும். ஏற்கனவே பள்ளிக்கு சென்ற குட்டீஸ் ஜூன், 2ல் பள்ளிக்கு செல்ல அடம் பிடிப்பர். விடுமுறையில் அவர்களது துாக்கம், சாப்பாட்டு நேரம், விளையாட்டு நேரங்கள் மாறியிருக்கும். காலையில் சீக்கிரம் எழுந்து, குளித்து ரெடியாகவே வேண்டும். சாப்பிட்டு விட்டு விளையாட வேண்டும் என சொல்லி அவர்களை இப்போதிருந்தே தயார்படுத்த வேண்டும். அப்போது தான் பள்ளி திறப்பு நாளில் சிரமங்கள் இருக்காது.
இவ்வாறு, டாக்டர் சஞ்சய் போஸ் கூறினார்.
முதன்முறை குட்டீஸ்களை பெற்றோர் பள்ளிக்கு அனுப்புகிறீர்கள் என்றால், ' உன்னை ஸ்கூலுக்கு கொண்டு போய் விட்டுருவேன்' என மிரட்டாதீர்கள்; இப்போதிருந்தே மனதுக்குள் ஒரு பயம் வந்து விடும்.