UPDATED : ஜூலை 16, 2026 07:00 PM
ADDED : ஜூலை 16, 2026 07:01 PM
விருதுபட்டி எனும் விருதுநகரில் குமாரசாமி - சிவகாமி அம்மாளுக்கு, 1903 ஜூலை, 15ல் மகனாக பிறந்தவர் காமராஜர். அவர், 6 வயது சிறுவனாக இருந்த போது, தந்தையை இழந்தார். 6ம் வகுப்பு படிக்கும் போதே, பள்ளி செல்வதை நிறுத்த வேண்டிய நிலைக்கு ஆளானார். திருமணம் செய்து கொள்ள மறுத்த அவர், இளவயதில் காங்., கட்சியில் சேர்ந்தார். நாட்டு விடுதலைக்கு, 9 ஆண்டு சிறையில் இருந்தார்.
பிரதமர் நேரு மறைவுக்கு பின், லால்பகதுார் சாஸ்திரி, இந்திராவை, பிரதமர்களாக உயர்த்தியதில் காமராஜரின் பங்கு அளப்பரியது. இருமுறை பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் முக்கிய பங்கு வகித்தவர் என்பதால் தான், 'கிங்மேக்கர்' என அழைக்கப்படுகிறார்.
மேலும், 1937ல் எம்.எல்.ஏ., 1940 முதல், 1954 வரை, தமிழக காங்., தலைவர்; 1941ல் விருதுநகர் நகராட்சி தலைவர்; 1946ல் மீண்டும் எம்.எல்.ஏ.,; 1947ல்அகில இந்திய காங்., உறுப்பினர்; 1949ல் காங்., காரிய கமிட்டி உறுப்பினர்; 1952ல் எம்.பி., 1954 முதல், 1963 வரை தமிழக முதல்வர்; 1963 முதல், 1967 வரை அகில இந்திய காங்., தலைவர்; 1969, 1971ல் எம்.பி.,யாக பொறுப்புகளை வகித்தவர் காமராஜர். காந்தி பிறந்த நாளான அக்., 2ல், 1975ம் ஆண்டில் காமராஜர் மறைந்தார். 1976ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
அவரது விருதுநகர் வீடு நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு காமராஜர் பயன்படுத்திய பொருட்கள், வாழ்க்கை நிகழ்ச்சிகளை எடுத்துக்கூறும் புகைப்படங்கள், படித்த நுால்கள் வைக்கப்பட்டுள்ளன. பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா தமிழகம் முழுதும் இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.
