உலகளாவிய தொழில்நுட்பம் கண்முன்னே! சாதிக்க துடிக்கும் பின்னலாடை தொழில்துறையினர்
உலகளாவிய தொழில்நுட்பம் கண்முன்னே! சாதிக்க துடிக்கும் பின்னலாடை தொழில்துறையினர்
UPDATED : மார் 09, 2026 11:12 AM
ADDED : மார் 09, 2026 11:16 AM
திருப்பூர்:
லட்சம் கோடி வர்த்தக இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் திருப்பூர் பின்னலாடை துறைக்கு, உலகளாவிய தொழில்நுட்ப ஆற்றலை பாய்ச்சக்கூடியதாக நிட்டெக் கண்காட்சி அமைந்துள்ளது.
திருமுருகன்பூண்டியில் உள்ள ஹைடெக் இன்டர்நேஷனல் டிரேடு பேர் மைதானத்தில், 18வது 'நிட்டெக்' பின்னலாடை இயந்திர கண்காட்சி, கடந்த 6ம் தேதி துவங்கியது. மூன்று பிரமாண்ட அரங்குகளில், 360 ஸ்டால்களில், உலகளாவிய அதிநவீன பின்னலாடை தொழில்நுட்ப இயந்திரங்கள் அனைத்தும் வைக்கப்பட்டுள்ளன.
'மேக் இன் இந்தியா' கோஷத்துக்கு வலு அமெரிக்கா, துருக்கி, இத்தாலி, ஜப்பான், சீனா, ஜெர்மனி போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமின்றி, 'மேக் இன் இந்தியா'வுக்கு பலம் சேர்க்கும் வகையில், திருப்பூர், கோவை போன்ற உள்நாட்டு நிறுவனங்களின் அதிநவீன இயந்திரங்களும் இடம் பெற்றிருக்கின்றன.
திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையினர் மதிப்பு கூட்டப்பட்ட ஆடை உற்பத்தியில் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். இந்நிலையில், பாலியெஸ்டர், நைலான், விஸ்கோஸ், லினென் போன்ற பல்வேறு நுாலிழை மற்றும் பாலி காட்டன் போன்ற கலப்பு இழையில் தயாரிக்கப்பட்ட துணிகளுக்கு சாயமேற்றும், டையிங் இயந்திரம்;
டிஜிட்டல் பிரின்டிங் மெஷின்களுக்கு கண் போன்று செயல்பட்டு, தவறுகளை முன்னரே கண்டறிந்து தெரிவிக்கும், ஏ.ஐ., தொழில் நுட்ப கேமரா கட்டமைப்பு; பிரின்டிங் மெஷின்களில், ஸ்கிரீன்களை சரியான இடத்தில் துல்லியமாக வைக்கும் தொழில்நுட்பம்; தனது கழுகுப் பார்வையினால், துணி தயாரிப்பு நடைபெறும் போதே தவறுகளை கண்டறிந்து தெரிவிக்கும் ஆய்வு கருவி; மிக குறைந்த தண்ணீர் பயன்பாட்டில் துணிக்கு சாயமேற்றும் டையிங் இயந்திரம் என, முந்தைய கண்காட்சிகளைவிட இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு இயந்திரமும், அதிநவீன தொழில்நுட்பங்கள் மிகுந்தவையாக உள்ளன.
உற்பத்தி அதிகரிக்கும் செலவினம் குறையும்
சந்தையில் நிலவும் வர்த்தக போட்டிகளை எதிர்கொள்வதற்கு, உற்பத்தி செய்யும் ஆடையில் நேர்த்தி, முதல்முறையிலேயே சரியாக ஆடை தயாரிப்பது, உற்பத்தியை வேகப்படுத்துவது; பல்வேறு வழிமுறைகள் வாயிலாக செலவினங்களை கட்டுப்படுத்துவது அவசியமாகிறது.
இதற்கு, தொழில்நுட்ப புதுப்பித்தல் மிகவும் இன்றியமையாததாகிறது. அந்தவகையில், ஒரே இடத்தில் சங்கமித்துள்ள புதிய தொழில்நுட்ப இயந்திரங்களை பார்வையிட, நாடு முழுவதும் உள்ள ஆடை உற்பத்தியாளர்கள், மிகுந்த ஆர்வமுடன் நிட்டெக் கண்காட்சிக்கு வருகின்றனர். நேற்றுவரையிலான மூன்று நாட்களில், மொத்தம் 19 ஆயிரம் பேர் கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர்.
நான்கு நாள் கண்காட்சி, இன்று மாலை, 06:00 மணியுடன் நிறைவடைகிறது. லட்சம் கோடி வர்த்தக இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் பின்னலாடை துறைக்கு, உலகளாவிய தொழில்நுட்ப ஆற்றலை பாய்ச்சும் நிட்டெக் கண்காட்சியை, அனைவரும் தவறாமல் பார்வையிட வேண்டும்.
