ஆராய்ச்சி உதவித்தொகையில் பாகுபாடு வேண்டாம்: மூட்டா - ஏ.யு.டி., வலியுறுத்தல்
ஆராய்ச்சி உதவித்தொகையில் பாகுபாடு வேண்டாம்: மூட்டா - ஏ.யு.டி., வலியுறுத்தல்
UPDATED : மார் 11, 2026 12:52 PM
ADDED : மார் 11, 2026 12:54 PM
விருதுநகர்:
அரசுக் கல்லுாரி மாணவர்களுக்கு வழங்கப்படுவது போல் அரசு உதவி பெறும் கல்லுாரி மாணவர்களுக்கும் முதல்வரின் ஆராய்ச்சி உதவித்தொகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு பல்கலை ஆசிரியர்கள் சங்கம் (ஏ.யு.டி.,) மதுரை காமராஜ், மனோன்மணியம் சுந்தரனார், மதர் தெரஸா, அழகப்பா பல்கலை ஆசிரியர்கள் சங்கம் (மூட்டா) அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.
ஏ.யு.டி., மாநில பொதுச் செயலாளர் சேவியர் செல்வராஜ், மூட்டா மாநில பொதுச்செயலாளர் செந்தாமரைக்கண்ணன் கூறியதாவது:
இந்தியாவில் தமிழகத்தில் தான் உயர்கல்வி மாணவர் சேர்க்கை சராசரி மிக அதிகமாக உள்ளது.
இதை முதல்வர் பெருமையாக கூறுகிறார். ஆனால் தமிழக உயர்கல்வித் துறையின் நான்காண்டு செயல்பாடுகள் அதற்கு நேர் எதிராக உள்ளன. உயர்கல்வித்துறை சாதனை படைக்க அரசு கல்லுாரிகள், அரசு உதவி பெறும் கல்லுாரிகள் இரண்டும் காரணமாக இருந்துள்ளன.
ஆனால் உதவி பெறும் கல்லுாரிகளை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அரசு நடத்துகிறது. தமிழக முதல்வரின் ஆராய்ச்சி உதவித்தொகை (சி.எம்.ஆர்.ஜி.,) திட்டம் 2023ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் மூலம் ரூ.40 லட்சம் வரை பெற்று ஆராய்ச்சிகள் செய்ய ஆசிரியர்கள், மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான 2026 - 27ம் ஆண்டு அறிவிப்பில் உதவி பெறும், சுயநிதி கல்வி நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் வராது என குறிப்பிடப்பட்டது. இது உதவி பெறும் கல்லுாரிகளில் நடக்கும் ஆராய்ச்சி மீது அரசு காட்டும் பாகுபாட்டையே உணர்த்துகிறது. அரசின் அறிவிப்பில் வெளிப்படையாக இவ்வாறு குறிப்பிடப்பட்டது கவலை அளிக்கிறது.
அரசு உதவி பெறும் கல்லுாரிகளை அழிக்கும் இந்த பாரபட்ச செயல்பாடுகளை உயர்கல்வித்துறை கைவிட வேண்டும். மாணவர்களின் ஆராய்ச்சி வாய்ப்புகளை தட்டிப்பறிக்கும் இந்த முடிவை திருத்தம் செய்து அனைவரும் விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

