10ம் வகுப்பு தேர்வு இன்று துவக்கம் 30,711 மாணவர்கள் பங்கேற்பு
10ம் வகுப்பு தேர்வு இன்று துவக்கம் 30,711 மாணவர்கள் பங்கேற்பு
UPDATED : மார் 11, 2026 12:48 PM
ADDED : மார் 11, 2026 12:52 PM
திருப்பூர் மாவட்டத்தில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்குகிறது. 109 மையங்களில், 29 ஆயிரத்து 444 மாணவர்கள், 1,267 தனித்தேர்வர்கள் தேர்வில் பங்கேற்க உள்ளனர். கடந்தாண்டு, 17வது இடம் பெற்ற திருப்பூர், நடப்பாண்டு மாநில அளவில், 10 இடங்களுக்குள் பெறும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
இன்று (11ம் தேதி) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்குகிறது. முதல் நாள் தமிழ், வரும், 16ல் ஆங்கிலம், 25ல் கணிதம், 30ம் தேதி அறிவியல், ஏப்., 2ல், சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது. ஏப்., 6ல் விருப்பமொழி பாடத்துடன் தேர்வுகள் முடிகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், 109 மையங்களில், 29 ஆயிரத்து 444 பேர் பொதுத்தேர்வை எதிர்கொள்ள உள்ளனர்; தனித்தேர்வர்களாக, 1,267 பேர் தேர்வெழுத உள்ளனர்.
முதன்மை கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர், தேர்வுக்கூட பொறுப்பாளர், தேர்வறை அலுவலர், நிலையான பறக்கும் படையினர், பறக்கும் படையினர், வினாத்தாள் கட்டுக்காப்பாளர், வழித்தட அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில், 2,100 கல்வி அலுவலர் ஈடுபட உள்ளனர்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சியில், கடந்த, 2022ல், 29வது இடம் பெற்ற திருப்பூர் கல்வி மாவட்டம், 2023ல் அதிரடியாக முன்னேறி, 11 இடத்துக்குள் முன்னேறியது. ஆனால், 2024ல் 21 வது இடத்துக்கு சென்றது.
கடந்தாண்டு (2025) 17வது இடம் பிடித்து, ஆறுதல் அளித்தது. இந்தாண்டு, தேர்ச்சி சதவீதத்தில் முன்னேறி, முதல் பத்து இடங்களுக்கும் வரும் என மாவட்ட கல்வி அதிகாரிகள் எதிர் பார்த்துள்ளனர்.

