UPDATED : ஆக 16, 2025 12:00 AM
ADDED : ஆக 16, 2025 10:47 PM
சென்னை:
இன்ஜினியரிங் துணை கவுன்சிலிங் தேதி, தள்ளிப்போக வாய்ப்புள்ளது என, தகவல் வெளியாகி உள்ளது.
அண்ணா பல்கலை கீழ் இயங்கும், 425 இன்ஜினியரிங் கல்லுாரியில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிளஸ் 2 துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்காக, இன்ஜினியரிங் துணை கவுன்சிலிங் விண்ணப்பப் பதிவு முன்கூட்டியே துவங்கி, கடந்த 12ம் தேதி நிறைவடைந்தது.
விண்ணப்ப கட்டணம் செலுத்தும் அவகாசம், நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணியுடன் முடிந்தது. இதில், 15,000க்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்தனர். தற்போது, மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணிகள் நடக்கின்றன. தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, வரும் 21ம் தேதி கவுன்சிலிங் துவங்கும் என முன்பு அறிவிக்கப்பட்டது.
தற்போது, சான்றிதழ் சரிபார்ப்பு உட்பட சில பணிகள் காரணமாக, கவுன்சிலிங் தேதி ஓரிரு நாட்கள் தள்ளிப்போக வாய்ப்புள்ளது என, தகவல் வெளியாகி உள்ளது.