என்ஜினியரிங் சீட் அதிகரிப்பு: மே 10 முதல் விண்ணப்பம்
என்ஜினியரிங் சீட் அதிகரிப்பு: மே 10 முதல் விண்ணப்பம்
UPDATED : ஏப் 24, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஒற்றைச்சாளர முறையில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் மே 10-ம் தேதியிலிருந்து வழங்கப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் க. பொன்முடி தெரிவித்தார்.
சென்னை, திருச்சி, திருநெல்வேலி மற்றும் கோவையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகிய இடங்களில் மே 26-ம் தேதி வரை இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். தபால் மூலமாகவும் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இணையதளம் மூலமாகவும் விண்ணப்பங்களைப் பதிவு செய்து சமர்ப்பிக்கலாம்.
அண்ணா பல்கலைக்கழகத் துறைகளில் உள்ள இடங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் உள்ள இடங்கள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களுக்காக இந்த விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கவுன்சலிங்கிற்கு வரும் மாணவர்களுக்கும் அவர்களுடன் வரும் ஒரு நபருக்கும் பஸ் கட்டணத்தில் 50 சதவீத சலுகை வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சென்ற ஆண்டு பொறியியல் படிப்பில் சேர ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். தனியார் பொறியியல் கல்லூரிகளில் மொத்தமுள்ள ஒரு லட்சத்து நான்காயிரத்து 814 இடங்களில் 89 ஆயிரத்து 995 மாணவர்கள் சேர்ந்திருந்ததனர். 14ஆயிரத்து 829 இடங்கள் காலியாக இருந்தன. இந்த ஆண்டு புதிய தனியார் கல்லூரிகள் மற்றும் புதிய அரசுக் கல்லூரிகளில் வருவதால் இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகங்கள் மூலம் புதிதாகத் தொடங்கப்பட உள்ள ஐந்து அரசு பொறியியல் கல்லூரிகள் மூலம் மொத்தம் ஆயிரத்து 200 இடங்கள் கூடுதலாக கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்த ஆண்டும் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இடம் கிடைக்கும் என்றார் பொன்முடி.