அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை; கலை பயில விரும்புவோருக்கு அழைப்பு
அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை; கலை பயில விரும்புவோருக்கு அழைப்பு
UPDATED : அக் 09, 2024 12:00 AM
ADDED : அக் 09, 2024 09:15 AM
உடுமலை :
உடுமலையில், அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நேற்று முதல் துவங்கியது.
தமிழக அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில், இசை, நாட்டியம் ஆகிய கலைகளை பயிற்றுவிக்கும் அரசு இசைக்கல்லுாரிகள் மற்றும் மாவட்ட அளவில் இசைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இத்துறையின் கீழ் ராமநாதபுரத்தில் செயல்பட்டு வந்த, அரசு இசைப்பள்ளி நிர்வாக காரணங்களுக்காக, திருப்பூர் மாவட்டம் உடுமலையில், நடப்பாண்டு முதல் செயல்பட உள்ளது. உடுமலை தளி ரோட்டிலுள்ள நகராட்சி பழைய அலுவலக கட்டடமான தாகூர் மாளிகையில், அரசு இசைப்பள்ளி செயல்பட துவங்கியது.
இசைப்பள்ளி முதல்வர் சரவண மாணிக்கம் கூறியதாவது:
அரசு இசைப்பள்ளியில், தமிழகத்தின் பாரம்பரிய கலைகளான, குரலிசை (பாட்டு), நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளில் பயிற்சியளிக்கப்படுகிறது.
பயிற்சி வகுப்புகள், வார நாட்களில், காலை, 10:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரை பள்ளி செயல்படும். 13 வயது முதல், 25 வயது வரை உடைய, ஆண், பெண் இரு பாலரும் பயிற்சியில் சேரலாம்.
பயிற்சி காலம், 3 ஆண்டுகள்; பயிற்சி முடிவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி கட்டணம் இல்லை. சேர்க்கை கட்டணமாக, ஆண்டுக்கு, ரூ.350 செலுத்த வேண்டும்.
பள்ளியில் சேரும், மாணவ, மாணவியருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். இசைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, மாதம் தோறும் கல்வி உதவி தொகையாக, ரூ.400 வழங்கப்படும். தற்போது, அரசு இசைப்பள்ளியில், மாணவ, மாணவியர் சேர்க்கை துவங்கியுள்ளது.
பாரம்பரியம் மிக்க கலைகளை பயில விருப்பம் உள்ள மாணவர்கள், சேர்ந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 95664 73769; 94432 07376 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அரசு இசைப்பள்ளி முதல்வர் தெரிவித்தார்.