இ.ஆர்.கே., கல்வி நிறுவனங்களில் 566 மாணவியருக்கு பட்டமளிப்பு
இ.ஆர்.கே., கல்வி நிறுவனங்களில் 566 மாணவியருக்கு பட்டமளிப்பு
UPDATED : ஜன 12, 2026 01:48 AM
ADDED : ஜன 12, 2026 01:48 PM

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த எருமியாம்பட்டியில் உள்ள இ.ஆர்.கே., கலைக்கல்லூரியின் 13வது மற்றும் கல்வியியல் கல்லூரியின் 9வது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் நடந்தது.
விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் செயலர் செல்வராஜ் தலைமை வகித்தார். கலைக்கல்லுாரி முதல்வர் முனைவர் சக்தி வரவேற்றார். கல்வியியல் கல்லுாரி துணை முதல்வர் கார்த்திக், கல்வியியல் கல்லுாரி ஆண்டறிக்கையை வாசித்தார்.
தொடர்ந்து கலை மற்றும் கல்வியியல் கல்லுாரிகளில், 566 மாணவியருக்கு பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் முனைவர் ராஜ், பட்டங்களை வழங்கி பேசுகையில், ''பட்டங்களை பெறுவது மட்டும் கல்வியாகாது. அதை நடைமுறைப்படுத்த வேண்டும். ஒரு பெண், பெறும் கல்வி, ஒரு சமூக மாற்றத்தையே ஏற்படுத்தும் என்பதை, ஒவ்வொருவரும் உணர வேண்டும். சமூக ஊடகங்களை நன்முறையில் பயன்படுத்தியும், வாசிப்பு பழக்கத்தை அதிகரித்தும் தங்களது இலக்கை அடைய வேண்டும். சாதனை புரிந்த அனைவரும் பல்வேறு இன்னல்களை கடந்துள்ளனர். ஆகையால், தங்களது இலக்கை அடையும் வரை விடாமுயற்சி, கடின உழைப்பு, நேர மேலாண்மை மற்றும் முறையான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.
விழாவில், நிர்வாக இயக்குனர் சோழவேந்தன், மருந்தியல் கல்லுாரி முதல்வர் முனைவர் ஆனந்த குமார், கல்வியியல் கல்லுாரி முதல்வர் முனைவர் மாலதி, நிர்வாக அலுவலர் அருள்குமார், அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.

