காலை உணவை தொடர்ந்து பள்ளிகளில் மாலை சிற்றுண்டி: சமூக நலத்துறைக்கு பரிந்துரை
காலை உணவை தொடர்ந்து பள்ளிகளில் மாலை சிற்றுண்டி: சமூக நலத்துறைக்கு பரிந்துரை
UPDATED : ஜன 10, 2026 11:28 AM
ADDED : ஜன 10, 2026 11:29 AM

சென்னை:
பள்ளிகளில் தினமும் மாலை நேரத்தில் மாணவர்களுக்கு, 'நியூட்ரிஷன் ஸ்நாக்ஸ்' எனப்படும் ஊட்டச்சத்து சிற்றுண்டி வழங்க, பொது சுகாதாரத்துறை சார்பில், சமூக நலத்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், மதிய சத்துணவு திட்டம் மற்றும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
காலை உணவுத் திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, வெண் பொங்கல், ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, இட்லி உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படுகின்றன.
சத்துணவுத் திட்டத்தின் கீழ், 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, மதியம் சாதம், சாம்பார், கீரை, காய்கறிகள், முட்டை உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், கூடுதலாக தினசரி மாலை நேரத்தில், பள்ளி மாணவர்களுக்கு வாழைப்பழம், ஆப்பிள், சிறுதானிய வகைகள் அடங்கிய மாலை சிற்றுண்டியாக, 'நியூட்ரிஷன் ஸ்நாக்ஸ்' வழங்க வேண்டும் என பொது சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து துறை சார்பில், சமூக நலத்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

