விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு: பல்கலை பேராசிரியர்கள் சந்தேகம்
விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு: பல்கலை பேராசிரியர்கள் சந்தேகம்
UPDATED : மார் 04, 2026 10:14 PM
ADDED : மார் 04, 2026 10:16 PM

சென்னை:
மூத்த பேராசிரியர் பதவி உயர்வுக்கு விண்ணப்பிக்க, தேதி குறிப்பிடாமல் அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதால், சென்னை பல்கலை பேராசிரியர்கள் சந்தேகமடைகின்றனர்.
சென்னை பல்கலையில், மூத்த பேராசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியானோர், கடந்த 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, ஏற்கனவே பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.
கெடு முடிந்த பின், மீண்டும் அவகாசம் நீட்டித்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இதில், கடைசி தேதி பற்றிய அறிவிப்பு இடம் பெறவில்லை. இதனால், ஏற்கனவே விண்ணப்பித்த பேராசிரியர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:
சென்னை பல்கலையில், ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், பதவி உயர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு, தணிக்கையில் ஆட்சேபனை உள்ளது.
தனியார், சுயநிதி பிரிவுகளில் உதவி பேராசிரியராக பணியாற்றி இருந்தால், அவர்களுக்கு அரசு கல்லுாரி மற்றும் பல்கலையில் சேரும் போது, இரு ஆண்டுகளுக்கான பணி அனுபவ சான்று வழங்கலாம் என, விதி உள்ளது.
ஆனால், பலர் வெளியில் பணியாற்றிய அனுபவத்தை குறிப்பிட்டு, ஏற்கனவே இணை பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
அவர்களில் பலருக்கு தற்போது தணிக்கை ஆட்சேபனை நிலுவையில் உள்ளது. அவர்களுக்காக இந்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனால், இதே பல்கலையில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும், அனுபவமுள்ள பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், உயர்கல்வித் துறை செயலர் கண்டிப்புடனும், நேர்மையுடனும் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

