முதுகலை வணிகவியல் படிப்பில் 7 பதக்கம் வென்று அசத்திய விவசாய தம்பதியின் மகள்
முதுகலை வணிகவியல் படிப்பில் 7 பதக்கம் வென்று அசத்திய விவசாய தம்பதியின் மகள்
UPDATED : பிப் 02, 2026 01:57 PM
ADDED : பிப் 02, 2026 01:59 PM

தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா தாலுகா ஜிகாலி கிராமத்தில் வசிக்கும் விவசாய தம்பதியான பரம கவுடா - மீனாட்சியின் மூத்த மகள் நயனா, 24. தாவணகெரே பல்கலையில் முதுகலை வணிகவியல் படித்தார். கல்லுாரியில் நேற்று முன்தினம் நடந்த பட்டமளிப்பு விழாவில் 7 தங்க பதக்கம் வென்று அசத்தினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
சிறுவயதில் இருந்தே வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. எனது படிப்புக்கு அனைத்து விதத்திலும், பெற்றோர் உதவி செய்தனர். அரசு கல்லுாரியில் பேராசிரியை ஆக வேண்டும் என்பது எனக்கு இலக்கு. எனது தந்தையும், தாயும் விவசாயிகள் என்று சொல்வதில் எனக்கு பெருமிதமாக உள்ளது.
முதல் மதிப்பெண்ணுடன், ஏழு தங்க பதக்கங்களை வென்றது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம். எங்கள் ஊரில் இருந்து தாவணகெரே தொலைவில் இருப்பதால், தாவணகெரே டவுனில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி படித்தேன்.
பாடத்தில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் சற்றும் தாமதம் செய்யாமல், விரிவுரையாளர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதே பல்கலையில் பி.எட்., படிப்பில் மூன்று தங்க பதக்கங்களை பழ வியாபாரியின் மகள் உஸ்மா வென்று உள்ளார்.
அவர் கூறுகையில், “எனது சொந்த ஊர் சன்னகிரி தாலுகாவின் சந்தேபென்னுார். எனது தந்தை பழ வியாபாரம் செய்து, என்னை படிக்க வைத்தார். இன்று மூன்று தங்க பதக்கங்கள் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. பதக்கங்களை தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன். என் சாதனையில் அவருக்கு மிகப்பெரிய பங்கு உண்டு,” என்றார்.

