புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் கவனம் செலுத்த வேண்டும் கருத்தரங்கில் அறிவுரை
புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் கவனம் செலுத்த வேண்டும் கருத்தரங்கில் அறிவுரை
UPDATED : பிப் 15, 2026 11:06 AM
ADDED : பிப் 15, 2026 11:07 AM
மதுரை:
மதுரை உற்பத்தி கவுன்சில் (எம்.பி.சி.,) சார்பில் உற்பத்தி வார விழாவில், தொழிற்சாலை பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் நடந்தது.
தமிழக அரசின் தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்கக இயக்குநர் ஆனந்த் பேசியதாவது: நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. மொத்தம் 54 ஆயிரத்து 162 பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகளில் 27 லட்சத்து 48 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர்.
தொழிற்சாலைகளில் விபத்து அதிகம் நடப்பதால் தொழிலாளர்களின் பாதுகாப்பு அவசியம். பாதுகாப்பின்றி பணிபுரிவதை தடுக்க வேண்டும்.
தமிழகத்தில் 1602 பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. அதில் 1125 ஆலைகள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளன. பட்டாசு விபத்துகளை தடுக்க வருவாய், போலீஸ், தீயணைப்பு உள்ளிட்ட துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம். புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் தொழிற்சாலைகள் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
இயக்ககத்தின் முன்னாள் இயக்குநர் போஸ், கூடுதல் இயக்குநர் சித்தார்த்தன், கவுன்சில் தலைவர் ஜெகன் மோகன், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கருத்தரங்கு சேர்மன் அறிவழகன், துணை சேர்மன்கள் சவுரிராஜன், வேணுகோபால், விழா சேர்மன் சஞ்சய், துணை சேர்மன் சவுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

