இந்திய புற்றுநோயாளிகளுக்கு வெளிநாட்டு சிகிச்சை முறை பொருந்தாது: ஆய்வில் தகவல்
இந்திய புற்றுநோயாளிகளுக்கு வெளிநாட்டு சிகிச்சை முறை பொருந்தாது: ஆய்வில் தகவல்
UPDATED : பிப் 05, 2026 09:18 PM
ADDED : பிப் 05, 2026 09:20 PM

சென்னை:
“இந்திய புற்றுநோயாளிகளுக்கு, வெளிநாட்டு சிகிச்சை முறைகள் இனி பொருந்தாது,” என, சென்னை ஐ.ஐ.டி., உயர் கல்வி நிறுவனத்தின் உயிரி தொழில்நுட்பவியல் துறை பேராசிரியர் மகாலிங்கம் கூறினார்.
சென்னை ஐ.ஐ.டி., யில், ஹூண்டாய் நிறுவனத்தின் பொது பங்களிப்பு நிதி உதவியுடன் செயல்படும் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் சார்பில், பி.சி.ஜி.ஏ., எனும், 'பாரத் புற்றுநோய் ஜீனோம் அட்லஸ்' உருவாக்கப்பட்டு உள்ளது. அதை, சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி நேற்று திறந்து வைத்தார்.
புரட்சி
அவர் பேசியதாவது:
தரவு பகுப்பாய்வுகளின் வாயிலாக, புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சி சென்னை ஐ.ஐ.டி.,யில் நடக்கிறது. அதன் முதல் கட்டமாக, மார்பகம், ரத்தம், குடல் மற்றும் கணைய புற்றுநோயாளிகள் 1,500 பேரிடம் இருந்து தரவுகள் சேகரித்து, 'ஜீனோம்' எனும் மரபணு தொகுப்புகளை பகுப்பாய்வு செய்து, அதன் முடிவுகளை, சுகாதாரத் துறைக்கு இலவசமாக வழங்கும் வகையில், நாட்டிலேயே முதல் முறையாக, 'பாரத் புற்றுநோய் ஜீனோம் அட்லஸ்' உருவாக்கி உள்ளோம். இது, மருத்துவ சிகிச்சை முறைகளில் புரட்சியை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி., உயிரி தொழில்நுட்பவியல் துறை பேராசிரியர் மகாலிங்கம் கூறியதாவது:
நம் நாட்டில் இதுவரை, மேற்கத்திய நாடுகளின் புற்றுநோய் சிகிச்சை முறைகள் மற்றும் மருந்தியல் முறைகளே கடைப்பிடிக்கப்படுகின்றன. இதன் வாயிலாக, பெரிதளவில் பலன் கிடைப்பதில்லை.
ஆனால், இந்தியர்களில் ஒன்பது பேரில் ஒருவருக்கு, புற்றுநோய் பாதிப்புக்கான ஆபத்து உள்ளது. அதன் காரணத்தைக் கண்டறியும் வகையில், ஜீனோம் பகுப்பாய்வு ஆராய்ச்சி மையத்தை உருவாக்கினோம்.
மாறுபாடு
நாட்டில் உள்ள முக்கிய புற்றுநோய் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும், 1,500 பேரின் மரபணுக்களை ஆராய்ச்சி செய்தோம். அதில், பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.
முக்கியமாக, இந்தியாவில், 'பிரக்கா - 1, 2' என்ற மரபணுவின் மாற்றத்துக்கான சிகிச்சை மட்டுமே அளிக்கப்படுகிறது. நாங்கள், 900 மார்பக புற்றுநோயாளிகளின் மரபணு தொடர்களை ஆராய்ந்ததில், பிரக்கா வகை ஜீன்களின் பாதிப்பு, வெறும் 6 சதவீதம் மட்டும் தான் என்பதை கண்டறிந்தோம். மேலும், 57 சதவீத மரபணு மாறுபாடுகள் ஏற்பட்டுள்ளதையும் கண்டுபிடித்துள்ளோம்; இது, மிக முக்கியமான கண்டுபிடிப்பு.
அவற்றின் தரவுகளை, மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள் அடுத்தகட்ட ஆராய்ச்சிக்கு பயன்படுத்தும் வகையில், பொது சொத்தாக, 'bcga.iitm.ac.in' என்ற இணையதளத்தில் பதிவேற்றி உள்ளோம்.
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 30 - 70 வயதுள்ள பெண்களின் ஜீனோம் மாதிரிகளை பகுப்பாய்வு செய்ததில், தமிழக பெண்களின் ஜீன்களில் வெவ்வேறு விதமான மரபணுக்களில், திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதை அறிந்துள்ளோம்.
இந்நிலையில், பாதிக்கப்படாத பிரக்கா 1, 2 ஜீன்களுக்கு, 'கீமோதெரபி' உள்ளிட்ட சிகிச்சைகள் அளிப்பதால், நோய் பாதிப்பு குறையாததுடன், பக்க விளைவுகளும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
அதனால், 'மரபுத்தொகுதி பகுப்பாய்வு' எனும் ஜீனோம் பகுப்பாய்வை மேம்படுத்தி, தரவுகளை சேகரித்து, அதுகுறித்து புற்றுநோய் மருத்துவர்களுக்கு புரிதலை ஏற்படுத்தும் வகையில், 'பாரத் கேன்சர் ஜீனோம் கிரிட்' என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளோம்.
மருந்தியல் துறை
அதன்படி, ஒவ்வொரு புற்றுநோயாளிக்கும், அவரது பாதிக்கப்பட்ட ஜீனின் தன்மைக்கு ஏற்ப, தனித்த சிகிச்சை அளிக்க வேண்டி இருக்கும். அதற்காக இந்திய மருத்துவம் மற்றும் மருந்தியல் துறைகள், அடுத்தகட்ட ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டியிருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், 'கார்சினோஸ் ஹெல்த்கேர்' நிறுவன தலைமை நோயறிதல் மற்றும் ஆராய்ச்சி அதிகாரியும், ஆய்வக இயக்குநருமான ஸ்ரீதர் சிவசுப்பு, தலைமை தரவு அதிகாரி வினோத் ஸ்காரியா, ஹூண்டாய் நிறுவன அதிகாரிகள் பங்கேற்றனர்.

