காலத்திற்கு ஏற்ற திறன்கள் மாணவர்களுக்கு அவசியம் மயில்சாமி அண்ணாதுரை அறிவுரை
காலத்திற்கு ஏற்ற திறன்கள் மாணவர்களுக்கு அவசியம் மயில்சாமி அண்ணாதுரை அறிவுரை
UPDATED : பிப் 05, 2026 09:14 PM
ADDED : பிப் 05, 2026 09:18 PM

சென்னை:
“மாணவ, மாணவியர், காலத்திற்கு ஏற்ப திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்,” என, 'இஸ்ரோ' முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
அண்ணா பல்கலையின் 46வது பட்டமளிப்பு விழா, பல்கலை வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நேற்று நடந்தது. பல்கலை வேந்தர் கவர்னர் ரவி, மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தினார்.
மொத்தம், ஒரு லட்சத்து 50,495 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. அதில், பி.எச்டி., மாணவ - மாணவியர் 753 பேர்; இளநிலை மாணவ, மாணவியர் 66 பேர் என, 819 பேர் நேரில் பட்டங்களை பெற்றனர்.
விழாவில், இந்திய விண்வெளி ஆய்வு மையமான, 'இஸ்ரோ' முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:
பட்டதாரிகள் பலருக்கு வேலையில்லை என்பது ஒரு செய்தி தான். ஆனால், பல பணிகளுக்கு, தகுதியான பட்டதாரிகள் இல்லை என்பது உண்மை. அதையும் தாண்டி, நேற்றிருந்த பல பணிகள் இன்று இல்லை.
உலக பொருளாதார மன்றம், தன் ஆய்வறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. அதில், 'வரும் 2030ம் ஆண்டுக்குள், உலக அளவில் 17 கோடி புதிய பணிகள் உருவாகும் அல்லது உருவாக்கப்படும்; தற்போதைய பணிகளில், 9 கோடி இல்லாது போகலாம்; பல கோடி பணிகள் உருமாறலாம்' என, கூறப்பட்டுள்ளது.
இந்நிலை, வரும் ஆண்டுகளில் தொடரும். செயற்கை நுண்ணறிவு திறனின் அபரிமித வளர்ச்சியே இதன் முக்கிய காரணியாகும். காலத்திற்கேற்ற திறன்களை வளர்த்துக் கொள்பவர்கள் மட்டுமே, களத்தில் நிற்க முடியும் என்பதை, மாணவ, மாணவியர் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பட்டமளிப்பு விழாவை, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் புறக்கணித்தார்.
பலத்த சோதனை
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையின் 87வது பட்டமளிப்பு விழா, கடந்த 2ம் தேதி நடந்தது. அதில் பட்டம் பெற்ற புஷ்பராஜ் என்ற மாணவர், முதல்வர் ஸ்டாலினின் புகைப்படத்தை கையில் வைத்துக் கொண்டு, கவர்னர் ரவியிடம் இருந் து பட்டத்தை பெற்றார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால், அண்ணா பல்கலையில் நேற்று பட்டம் பெறும் மாணவ, மாணவியரை, பலத்த சோதனைக்கு பின்னரே, மேடை ஏற போலீசார் அனுமதித்தனர்.

