UPDATED : பிப் 04, 2026 01:30 PM
ADDED : பிப் 04, 2026 01:31 PM
பெங்களூரு: கர்நாடகாவில் அரசு பள்ளிகளில், 1 முதல் 10ம் வகுப்பு வரையிலும், பி.யு.சி., மாணவர்களுக்கும் இலவச பாட மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்க பள்ளிக்கல்வி, எழுத்தறிவு துறை துணை செயலர் சுபமங்களா உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதன் மூலம் அரசு, அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும், 61 லட்சம் மாணவர்கள் பயனடைய உள்ளனர்.
இது குறித்து, அவரது அறிக்கை:
அடுத்த கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்களை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பாடப்புத்தகங்களில் பயன்படுத்தப்படும் காகிதத்தில் சமரசம் செய்யக்கூடாது. கூடுதல் புத்தகங்கள் கோரி மாற்றம் செய்யக்கூடாது. அரசு பணம் தவறாக பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது, பெற்றோருக்கு சுமையை குறைக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும், அரசு துவக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 3,682 பள்ளிகளில், 'ஸ்மார்ட்' வகுப்புகள் அமைக்க 'சமக்ர சிக் ஷா' திட்டத்தின் கீழ் 91.54 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

