ரயில்வே குரூப் டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்
ரயில்வே குரூப் டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்
UPDATED : பிப் 18, 2026 02:57 PM
ADDED : பிப் 18, 2026 03:00 PM
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் ரயில்வே குரூப் டி எழுத்து தேர்வுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி மற்றும் இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 24ம் நடக்கிறது.
இது குறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் (ஆர்.ஆர்.பி.,) குரூப் டி தேர்விற்கு 10ம் வகுப்பு கல்வித் தகுதி நிலையில் பல்வேறு பதவிகளுக்கு மொத்தமாக 22,195 காலிப்பணியிடங்களுக்கு https://www.rrbapply.gov.in/ என்ற இணையதளம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இக்காலி பணியிடங்களுக்கு மார்ச் 2ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள், 2026 ஜன., 1ம் தேதியன்று 18 முதல் 33 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு.
இத்தேர்வுகள் கணினி அடிப்படையில், உடல் திறன் சோதனை, மருத்துவ பரிசோதனை மற்றும் ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் நடைபெறும். ஆன்லைன் எழுத்துத் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடத்தப்படும். எழுத்துத் தேர்வில் பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு, பொது அறிவு, அறிவியல், கணிதம் ஆகியவற்றிலிருந்து 100 கேள்விகள் கொள்குறி வகையில் கேட்கப்படும்.
கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் மேற்கண்ட ரயில்வே ஆட்சேர்ப்பு வாரிய குரூப் டி எழுத்து தேர்வு குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி மற்றும் இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 24ம் தேதி காலை 11:00 மணிக்கு நடக்கிறது.
இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் புகைப்படம் மற்றும் ஆதார் எண் விவரங்களுடன், நேபால் தெருவில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04151 - 295422 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

