UPDATED : ஜன 01, 2026 08:41 AM
ADDED : ஜன 01, 2026 08:41 PM

பெங்களூரு:
கர்நாடகாவில் அடுத்தாண்டு முதல் பி.யு., கல்லுாரி மாணவர்களுக்கும் இலவசமாக பாடப்புத்தகங்களை வழங்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
அரசு பி.யு., கல்லுாரிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கவும், தரமான கல்வி வழங்கவும் பள்ளி கல்வித்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதுவரை ஒன்றாம் வகுப்பில் இருந்து, 10ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இலவசமாக பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று, அரசு கல்லுாரி மாணவர்களுக்கும் இலவசமாக மதிய உணவுடன், பாடப்புத்தகங்களும் வழங்க பள்ளி கல்விதுறை முடிவு செய்து உள்ளது.
கர்நாடகாவில் தற்போது 1,319 அரசு கல்லுாரிகளில் 13.17 லட்சம் மாணவர்கள்; 815 உதவி பெறும் கல்லுாரிகளில் 1.91 லட்சம் மாணவர்கள் என ஆண்டுதோறும், 15 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இத்திட்டம் 2026 - 27ம் ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. இதனால், ஆண்டுதோறும், 15 லட்சம் மாணவர்கள் பயனடைவர். இது தொடர்பாக ஏற்கனவே பள்ளி கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா உறுதி அளித்திருந்தார்.

