பள்ளிகளில் தினமும் நாளிதழ் படிப்பதை கட்டாயமாக்குங்க; அரசுக்கு குழந்தைகள் ஆணையம் சிபாரிசு
பள்ளிகளில் தினமும் நாளிதழ் படிப்பதை கட்டாயமாக்குங்க; அரசுக்கு குழந்தைகள் ஆணையம் சிபாரிசு
UPDATED : ஜன 01, 2026 08:39 PM
ADDED : ஜன 01, 2026 08:40 PM
பெங்களூரு: கர்நாடகா அரசின் தலைமை செயலர் ஷாலினி ரஜ்னீஷுக்கு, குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் சசிதர் கோசும்பே எழுதியுள்ள கடிதம்:
அதிவே கமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் யுகத்தில், மாணவர்கள் இணையதளம், பொழுதுபோக்கு மற்றும் சமூக வலைதளங்களில் அதிகமான நேரத்தை செலவிடுகின்றனர்.
நிறைய நேரம் மொபைல் போன் பயன்படுத்துவதால், நினைவுத்திறன் குறையும் அபாயம் உள்ளது. பார்வை குறைபாடு, காது கேளாமை போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம்.
உடல் ரீதியான செயல்பாடுகளும் குறைந்துள்ளன. எனவே மாணவர்கள் தினமும், 10 முதல், 15 நிமிடம் வரை நாளிதழ் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டால், அவர்களின் நினைவுத்திறன் அதிகரிக்கும். தேர்வு எழுதும் போது உதவியாக இருக்கும்.
உத்தரபிரதேச அரசு, பள்ளிகளில் தினமும் மாணவர்கள், நாளிதழ் படிப்பதை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே போன்று, கர்நாடகாவிலும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், மாணவர்கள் நாளிதழ் படிப்பதை கட்டாயமாக்க வேண்டும்.
அரசின் வெவ்வேறு துறைகளின் சார்பில் நடத்தப்படும் மாணவர் விடுதிகள், உறைவிட பள்ளிகள், சிறார்கள் காப்பகத்திலும் நாளிதழ் படிப்பதை கட்டாயமாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

