இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து அரசு டாக்டர்கள் போராட்டம்
இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து அரசு டாக்டர்கள் போராட்டம்
UPDATED : ஆக 16, 2024 12:00 AM
ADDED : ஆக 16, 2024 08:24 AM

சென்னை:
மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, அரசு டாக்டர்கள் இன்று கருப்பு, 'பேட்ஜ்' அணிந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில், அரசு மருத்துவ கல்லுாரியில் பெண் பயிற்சி டாக்டர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்திற்கு, நாடு முழுதும் டாக்டர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள் இன்று, கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்த உள்ளனர்.
இதுகுறித்து, ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் கூறுகையில், மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், சட்ட திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இதற்காக, இன்று டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்ற உள்ளனர். மேற்குவங்கத்தில் நிகழ்ந்தது போன்ற சம்பவங்களை தவிர்க்கும் வகையில், மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும், என்றார்.
அரசு டாக்டர்கள் மற்றும் சட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்க செயலர் ராமலிங்கம் கூறுகையில், டாக்டர் படுகொலைக்கு நியாயம் கிடைக்கவும், மருத்துவ மாணவர்கள், டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கக்கோரியும், அரசு டாக்டர்கள் இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபடுவர், என்றார்.
அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக்குழு தலைவர் பெருமாள் பிள்ளை கூறுகையில், கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண் டாக்டருக்கு நியாயம் கிடைக்க அரசை வலியுறுத்தும் வகையில், இன்று காலை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை முன் போராட்டம் நடத்தப்படும், என்றார்.