UPDATED : ஆக 22, 2024 12:00 AM
ADDED : ஆக 22, 2024 12:18 PM
சென்னை:
சென்னைப் பல்கலையில் படித்து, தேர்வெழுதி காத்திருக்கும் மாணவர்களுக்கு, பட்டம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உயர்கல்வி துறை சார்பில், தமிழக கவர்னர் ரவிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
தமிழகத்தில், சென்னைப் பல்கலை உள்ளிட்ட ஐந்து பல்கலைகளில், துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. இதனால், இங்கு படித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா உள்ளிட்ட செயல்பாடுகள் நடக்காமல் உள்ளன.
சென்னைப் பல்கலையில் மட்டும், 50,000த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், பட்டப் படிப்பை முடித்தும் சான்றிதழ் பெறாமல் உள்ளனர். இதனால், உயர்கல்வி, வேலைவாய்ப்புகளில் சேர முடியாமல், அவர்கள் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து, மாணவர்கள், பெற்றோர் தொடர்ந்து, பல்கலை நிர்வாகத்திடம் புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக உயர்கல்வி துறை சார்பில், தமிழக கவர்னர் ரவிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
கடிதத்தில், தமிழகத்தில் சென்னைப் பல்கலை, ஆசிரியர் கல்வியியல் பல்கலை உள்ளிட்ட ஐந்து பல்கலைகளில் துணைவேந்தர் பொறுப்பு காலியாக உள்ளது. சென்னைப் பல்கலையில் பட்டமளிப்பு விழாவும் நடத்தப்படவில்லை.
அதனால், பல்கலைகளில் காலியாக உள்ள துணை வேந்தர் பணியிடங்களை உடனடியாக நிரப்பி, பட்டமளிப்பு விழாவையும், உடனடியாக நடத்த வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.