புகாருக்கு ஆளான அரசு பள்ளி தலைமை ஆசிரியர் இடமாற்றம்
புகாருக்கு ஆளான அரசு பள்ளி தலைமை ஆசிரியர் இடமாற்றம்
UPDATED : ஜூலை 31, 2025 12:00 AM
ADDED : ஜூலை 31, 2025 09:16 AM
பாப்பிரெட்டிப்பட்டி:
புட்டிரெட்டிப்பட்டியில், புகாருக்கு ஆளான அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டம், கடத்துார் அடுத்த புட்டிரெட்டிப்பட்டியிலுள்ள, அரசு மேல்நிலைப்பள்ளியில், 187 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இங்கு தலைமையாசிரியர் உட்பட, 15 ஆசிரியர்கள், பணி புரிகின்றனர். கடந்த, 25ல் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. இதில், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் மீது, மேலாண்மை குழு உறுப்பினர்கள் பல புகார்களை தெரிவித்தனர். இதற்கு சரியான பதில் கூறாமல், உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என, தலைமை ஆசிரியர் கூறியதால், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மேலும், பட்டதாரி ஆசிரியர்கள் சிலர், ஜாதி பெயரை சொல்லி மாணவியரை திட்டுவதாகவும், ஆசிரியர்களுக்குள் ஜாதி பாகுபாடு இருப்பதாகவும், இதனால் மாணவர்களுடைய கல்வி பாதிப்பதாகவும் கூறி, பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு, பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மாவட்ட சி.இ.ஓ., ஜோதி சந்திரா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பெற்றோர் புகார் மனு அளித்தனர். அதன்படி அவர் விசாரணை நடத்தினார். இதையடுத்து தலைமை ஆசிரியர் எஸ்சேந்திராவை, கடத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும், அங்கு பணியாற்றிய தலைமை ஆசிரியர் மணியை புட்டிரெட்டிப்பட்டிக்கும் இடமாற்றம் செய்து, சி.இ.ஓ., ஜோதிசந்திரா உத்தரவிட்டார்.

