UPDATED : ஜூன் 20, 2025 12:00 AM
ADDED : ஜூன் 20, 2025 11:19 AM

திருப்பூர் : அரசு பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின், ஆங்கில திறனை வளர்க்கும் லெவல் அப் திட்டம் பள்ளி கல்வித்துறையால் அறிவிக்கப்பட்டது. திட்ட செயல்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவர்களின் அடிப்படை ஆங்கில மொழியறிவு திறனை மேம்படுத்த லெவல் அப் என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், மொழித்திறன்களை வளர்க்கும் வகையில் கற்பித்தல் நுட்பங்களை தாங்களே உருவாக்கி வகுப்பறைகளில் வெற்றிகரமாக பாடம் நடத்தி வரும் ஆசிரியர்களை கண்டறிந்து, சில ஆசிரியர்கள் மேற்கொள்ளும் கற்பித்தல் நுட்பங்களை, பிற ஆசிரியர்கள் அறியும் வகையில், அவற்றை மொழிவள வங்கியாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
லெவல் அப் திட்டம் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியர் ஆங்கில மொழி வாசித்தல், பேசுதல் மற்றும் எழுதுதல் ஆகிய அடிப்படையை எளிதாக கற்றுக்கொள்ள வகை செய்வதாகும்.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆசிரியர்கள் அடங்கிய குறைந்த பட்ச மொழித்திறன் அறியும் குழு அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் அறிந்து கொள்ள உதவும் வகையில் இத்திட்டச் செயல்பாடு குறித்து மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
சிறப்பு ஆங்கில வகுப்புகள்
ஜூலையில் துவங்குகிறதுஅனுபவம் மிக்க ஆங்கில ஆசிரியர் கொண்ட விரிவான பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு எளிதில் ஆங்கிலம் புரியும் வகையில் பாடம் கற்பிக்கும் ஆசிரியர் கொண்ட குழு அமைக்கப்படும். அக்குழுவினர் நடுநிலைப்பள்ளிகளில் சிறப்பு ஆங்கில பாட வகுப்புகளை ஜூலை முதல் வாரத்தில் துவங்குவர். விரிவான அறிவிப்பு தலைமை ஆசிரியர் மூலம் தெரிவிக்கப்படும்.- கல்வித்துறை அதிகாரிகள்.