வாழ்க்கையில் மாணவர்களின் உயர அடித்தளம் அமைக்கும் அரசுப்பள்ளி
வாழ்க்கையில் மாணவர்களின் உயர அடித்தளம் அமைக்கும் அரசுப்பள்ளி
UPDATED : பிப் 01, 2026 06:49 AM
ADDED : பிப் 01, 2026 06:49 PM

வாழ்க்கையில் மாணவர்கள் உயர்வதற்கு மிகச்சிறந்த அடித்தளத்தை, சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி உருவாக்கி அளித்து வருகிறது.
கடலுார் வட்டம், சி.என்.பாளையம் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த, 1981ம் ஆண்டு இந்த உயர்நிலைப்பள்ளி துவங்கப்பட்டது.
அப்பகுதியில் மேல்நிலை படிப்பு படிக்க மாணவர்கள் வெளியூர் செல்ல மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில், கடந்த, 2010ம் ஆண்டு, இப்பள்ளிய மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் படித்த பலர் மத்திய,மாநில அரசு பணியில் வேலை செய்து வருகின்றனர்.
இப்பள்ளியில் சாரண, சாரணியர் இயக்கம், பசுமைப்படை, இளையோர் செஞ்சிலுவை சங்கம், என்.எஸ்.எஸ்., சாலை பாதுகாப்பு மன்றம், போதை பொருள் தடுப்பு மன்றம் உள்ளிட்ட அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விளையாட்டு போட்டிகளில் மாவட்ட, ஒன்றிய, வட்டார அளவில் மாணவர்கள் விளையாடி பல பரிசுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்திக்கது.
இப்பள்ளியில் பணிசெய்யும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களின் நலனில் முழு முயற்சி எடுத்து வருகின்றனர்.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் அரசு பொதுதேர்வில் அதிகளவு மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று வருகின்றனர்.
பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோரை அணுகி, மாணவர்களின் கல்வி தரத்தினை அதிகப்படுத்திட கடுமையாக உழைத்து வருகின்றனர்.
பள்ளியால் பெருமை
அரசு பள்ளியில் ஆசிரியராக கடந்த, 2002 ம் ஆண்டு பணியில் சேர்ந்தேன். தலைமை ஆசிரியராக வண்டிப்பாளையம் அரசு பள்ளியில் பணி செய்து, பணி மாறுதல் பெற்று தற்போது கடந்த, 2019 ம்ஆண்டு முதல் இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி செய்து வருகிறேன். இப்பள்ளியில் உள்ள மற்ற ஆசிரியர்கள் முழுமனதுடன் மாணவர்களின் கல்வி தரத்திற்காக அயராது பாடுபட்டு வருகின்றனர். பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மைக் குழு நிர்வாகிகள் அனைவருடன் பள்ளியின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகின்றனர். முன்னாள் மாணவர்கள், ஊரின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் பள்ளி வளர்ச்சிக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது . - அமுதா, தலைமை ஆசிரியர்.
ஆசிரியர்களின் ஊக்கம் உயர்வு தந்தது
நான் கடந்த 1983ம் ஆண்டு இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தேன். மேற்படிப்பு படித்து நெய்வேலி என்.எல்.சி.,யில் பணியில் சேர்ந்து, படிப்படியாக பதவி உயர்வு பெற்று தற்போது உதவி பொது மேலாளராக பதவி உயர்வு பெற்று, எஸ்டேட் அதிகாரியாக பணி புரிந்துவருகிறேன். பள்ளியில் படிக்கும் போது ஆசிரியர்கள் எனக்கு அளித்த ஊக்கம், மேற்படிப்பு படிக்க வழிவகை செய்தது. மேலும் நான் படித்த பள்ளியில் தற்போது படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் எனது பெற்றோர் ராமலிங்கம் - மங்களம் பேரில், சகோதரர்களுடன் இணைந்து கல்வி அறக்கட்டளை ஆரம்பித்து ஒவ்வொரு ஆண்டும் அரசு பொதுதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறேன். இப்பள்ளியில் நான் படித்ததில் பெருமை கொள்கிறேன். - பன்னீர்செல்வம், என்.எல்.சி., அதிகாரி.
இயற்கை சூழலில் அமைந்த பள்ளி
இப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து பள்ளிக்கு அடிக்கடி சென்று மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு இயன்ற பணிகளை செய்து வருகிறேன். மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர். இப்பள்ளி இயற்கை சூழலில் மலையடிவாரத்தில் உள்ளது. இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகமும், பள்ளி மேலாண்மை குழுவினரும் மிக சிறப்புடன் செயல்பட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு முழுமனதுடன் செயல்பட்டு வருகிறது. அரசு பொது தேர்வில் அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற வாழ்த்துக்கள். - சோமு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்.
ஒழுக்கத்துடன் கூடிய கல்வி
நான் இந்த பள்ளியில் கடந்த 1987ம் ஆண்டு, 10ம் வகுப்பு படித்தேன். படிக்கும் காலத்தில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஒழுக்கத்துடன் கூடிய கல்வி கற்பித்தனர். இதனால் நல்ல முறையில் படித்தோம். படிக்கும் போது அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்பது எனது லட்சியமாக கொண்டு படித்தேன். அதனடிப்படையில் கடுமையாக முயன்று தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் காவல்துறை சப் இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருகிறேன். - ராஜேந்திரன், பள்ளி முன்னாள் மாணவர்.
மாணவர்களின் நலனில் தனி அக்கறை
சி.என்.பாளையத்தில் யாசின் டிரஸ்ட் என்ற அமைப்பை ஏற்படுத்தி மாணவர்களின் கல்வித்தரத்தினை உயர்த்த பாடுபட்டு வருகிறேன். இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு பொதுதேர்வை சுலபமாக எழுதி அதிக மதிப்பெண்கள் பெற தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சியினை கல்வி வல்லுனர்களை கொண்டு ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம். மேலும் மாணவர்களை ஊக்கப்படுத்த பரிசுளையும் வழங்கி வருகிறோம். பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை நல்வழிபடுத்தவும், கல்வியில் சிறந்தவர்களாக விளங்கிட கடுமையாக உழைத்து வருகின்றனர். மாணவர்களின் நலனில் அக்கறையுடன் செயல்படும் பள்ளி ஆசிரியர்களை யாசின் டிரஸ்ட் மனதார பாராட்டுகிறது. - சிராஜூதீன், யாசின் டிரஸ்ட் நிறுவனர்.
அரசு பணிக்கு செல்லஊக்கப்படுத்தியது
நான் இப்பள்ளியில், 10ம் வகுப்பு கடந்த, 2000 ம் ஆண்டு படித்து பொதுதேர்வில், 5 வது இடம் பிடித்தேன். எனக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்கள் கல்வியையும், ஒழுக்கமும் கற்று கொடுத்தனர். எனக்கு சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் தற்போது கடலுார் சி.இ.ஓ.,நேர்முக உதவியாளராகவும்,தலைமை ஆசிரியராகவும் உள்ளது பெருமையாக உள்ளது. நான் தற்போது நெல்லிக்குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியில் உள்ளேன். எனது பள்ளி ஆசிரியர்கள் மதிய இடைவெளியிலும் மாணவர்களுக்கு சிறு தேர்வு நடத்தி, படிப்பின் ஆர்வத்தினை ஏற்படுத்தினர். பள்ளி ஆசிரியர்களிடம் தண்டனை பெறக்கூடாது என்ற எண்ணத்தினாலும், வாழ்வில் அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தினாலும் படித்து அரசு பணியில் உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. நான் கற்றுக்கொண்ட பாடங்களை, பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி என்னிடம் படிக்கும் மாணவர்களுக்கு கற்பித்து வருகிறேன். - தணிகாசலம், அறிவியல் ஆசிரியர்.
வழிகாட்டிய ஆசிரியர்கள்
நான் இப்பள்ளியில் கடந்த 2022 - 2023ம் ஆண்டு பிளஸ் 2 படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்றேன். இதனால் தற்போது 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சென்னையில் உள்ள எஸ்.எஸ்.என்., கல்லுாரியில் இன்ஜினியரிங் சேர்ந்து படித்து வருகிறேன். என்னை போன்று பல மாணவ, மாணவிகள் இட ஒதுக்கீட்டின் கீழ் பல கல்லுாரிகளில் படித்து முடித்தும், தற்போது படித்தும் வருகின்றனர். எனக்கு வழிகாட்டிய அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி. - தீபலட்சுமி, முன்னாள் மாணவி.

