அரசு துவக்கப்பள்ளிகளில் அட்மிஷன் சுறுசுறுப்பு! 2 வாரத்தில், 1,777 பேருக்கு விண்ணப்பம்
அரசு துவக்கப்பள்ளிகளில் அட்மிஷன் சுறுசுறுப்பு! 2 வாரத்தில், 1,777 பேருக்கு விண்ணப்பம்
UPDATED : மார் 15, 2026 01:20 PM
ADDED : மார் 15, 2026 01:22 PM
திருப்பூர்:
வரும், 2026 - 27ம் கல்வியாண்டுக்கு, மார்ச் 2 முதல் அட்மிஷன் துவங்க பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியது. திருப்பூர் மாவட்டத்தில், கடந்த, இரு வாரங்களில் நடந்த அட்மிஷனில், 1,777 பேர் ஒன்றாம் வகுப்பில் இணைய விண்ணப்பித்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில், 2024ம் ஆண்டு முதல் மார்ச் 1ம் தேதி அடுத்த கல்வியாண்டுக்கான அட்மிஷன் துவங்கப்படுகிறது. அவ்வகையில், 2026 - 27ம் கல்வியாண்டுக்கான அட்மிஷன் கடந்த, 2ம் தேதி துவங்கியது.
அங்கன்வாடி மையங்களில், முன்பருவ கல்வியை நிறைவு செய்யும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை, அந்தந்த பகுதியில் உள்ள, அரசு பள்ளிகளில் சேர்க்க, தலைமை ஆசிரியர் முனைப்பு காட்ட வேண்டுமென தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டது.
அத்துடன், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவி, உதவித்தொகை, எண்ணும் எழுத்தும், காலை உணவுத்திட்டம், ஸ்மார்ட் வகுப்பறை உள்ளிட்டவை குறித்து, பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அட்மிஷன் அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டது. சில பள்ளி நுழைவுவாயில், முகப்பு பகுதியில் அட்மிஷன் குறித்த அறிவிப்புகளும் வைக்கப்பட்டது.
உடுமலையில் அதிகம்
இது குறித்து திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) சித்ரா கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில், 400க்கும் மேற்பட்ட துவக்கப் பள்ளிகளில், கடந்த, 2ம் தேதி முதல் அட்மிஷன் துவங்கியுள்ளது. மாவட்டத்தில் உள்ள, 14 வட்டாரங்களில், அதிகபட்சமாக, உடுமலையில், 220 குழந்தைகள் அரசு துவக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் இணைய, விண்ணப்பித்துள்ளனர். குறைந்தபட்சமாக மூலனுார் வட்டாரத்தில், 46 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அவிநாசி - 197, பல்லடம் - 192, தாராபுரம் - 172, திருப்பூர் வடக்கு - 152, தெற்கு - 127, ஊத்துக்குளி - 126, மடத்துக்குளம் - 119, குடிமங்கலம் - 112, பொங்கலுார் - 109, காங்கயம் - 77, வெள்ளகோவில் - 71, குடிமங்கலம் - 57 என, கடந்த இரு வாரங்களில், 1,777 பேர் துவக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் இணைய விண்ணப்பித்துள்ளனர். மாநில அளவில், துவக்கப்பள்ளி மாணவர் சேர்க்கையில் நான்காமிடத்தில் திருப்பூர் மாவட்டம் உள்ளது.
துவக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் கணிசமான அளவில் அதிகரிக்க வேண்டும். அதற்கேற்ப மாணவர் சேர்க்கைக்கான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அட்மிஷன் நடந்து வருவதால், பெற்றோர், துவக்கப் பள்ளி வயது வந்த குழந்தைகளில் ஒன்றாம் வகுப்பில் இப்போதே சேர்த்துக் கொள்ளலாம்.

