UPDATED : செப் 27, 2024 12:00 AM
ADDED : செப் 27, 2024 10:10 PM
சென்னை:
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், மாணவியருக்கான தனி ஓய்வறைகள் அமைக்க, 8.55 கோடி ரூபாயை மூன்று வாரங்களில் ஒதுக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம், கெடு விதித்து உள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள்,கல்லுாரிகளில், மாணவியருக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் செயல்படாமல் உள்ளதாக வெளியான செய்தி அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய முதல் பெஞ்ச் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, மாநிலம் முழுதும் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளிலும், மாணவியருக்காக தலா 5 லட்சம் ரூபாய் வீதம், 8.55 கோடி ரூபாய் செலவில் தனி ஓய்வறைகள் கட்டப்பட உள்ளன.
பள்ளிகளில் நாப்கின் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ள விபரங்கள் குறித்த தகவல் சேகரிக்கப்பட்டு, தொகுக்கப்பட்டு வருகின்றன, என்றார்.
இதையடுத்து, அரசு கல்லுாரிகளில், மாணவியருக்கு தனி ஓய்வறைகள் கட்ட, 8.55 கோடி ரூபாயை, மூன்று வாரங்களில் ஒதுக்கும்படி அரசுக்கு உத்தரவிட்ட முதல் பெஞ்ச், வழக்கை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தது.