திராட்சை விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சி தேவை
திராட்சை விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சி தேவை
UPDATED : பிப் 05, 2026 12:34 PM
ADDED : பிப் 05, 2026 12:38 PM
கம்பம்: திராட்சை விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சி வகுப்புகள் நடத்த திராட்சை ஆராய்ச்சி நிலையமும், தோட்டக்கலைத் துறையும் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
கம்பம் பள்ளத்தாக்கில் பன்னீர் திராட்சையும், ஒடைப்பட்டி பகுதியில் விதையில்லா திராட்சையும் சாகுபடியாகிறது. இதில் பன்னீர் திராட்சைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
விதையில்லா திராட்சைக்கு புவிசார் குறியீடு பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கம்பம் பகுதியில் மழை,பனி காலங்களில் செவட்டை நோய், அடிச்சாம்பல் நோய், மகசூல் பாதிப்பு, விலை கிடைக்காதது உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்கின்றன.
இது குறித்து முந்தைய கலெக்டர் ஷஜீவனா திராட்சை ஆராய்ச்சி நிலையத்திற்கும், தோட்டக்கலைத் துறைக்கும் நவீன தொழில்நுட்ப பயிற்சி முகாம்கள் நடத்த வலியுறுத்தினார்.
ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆராய்ச்சி நிலையம் சார்பில் எந்தவொரு தொழில்நுட்ப ஆலோசனை கூட்டங்களும் திராட்சை விவசாயிகளுக்கு நடத்தப்படுவதில்லை.
திராட்சை விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பங்கள், மார்க்கெட்டிங் பிரச்னைகளை தீர்ப்பது, அதிக மகசூலுக்கான வழிமுறைகள் பற்றி கூற வேண்டும்.
தொடர்ந்து வெப்பம், அதிக மழை காலங்களில் பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்களை விளக்க வேண்டும். முன்னோடி விவசாயிகளை அழைத்து அவர்களின் அனுபவங்கள் மற்றும் ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இதற்கான பணிகளை திராட்சை ஆராய்ச்சி நிலையமும், தோட்டக்கலைத் துறை மாற்றும் மார்க்கெட்டிங் பிரச்னைகளை தீர்க்க வேளாண் வணிக துறையும் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

