அரசு பள்ளிகளில் கட்டுமானங்கள் தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் மறைப்பு
அரசு பள்ளிகளில் கட்டுமானங்கள் தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் மறைப்பு
UPDATED : பிப் 05, 2026 12:29 PM
ADDED : பிப் 05, 2026 12:34 PM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அரசு பள்ளிகளில் நிறைவேற்றப்படும் கட்டுமானம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்காததால், அவற்றின் தரத்தை கண்காணிக்க முடியாமல் ஆசிரியர்கள் திணறுகின்றனர்.
இவ்வொன்றியத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் ஊராட்சி ஒன்றியம் சார்பில் வகுப்பறை, கழிப்பறை, சுற்றுச்சுவர் சமையலறை, மின் இணைப்பு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படுகின்றன.
மேல், உயர்நிலைப் பள்ளிகளில் பொதுப்பணித்துறை சார்பில் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பள்ளிகளில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்கள் குறித்து வட்டாரக் கல்வி அலுவலகம் மூலம் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் அனுப்பப்படும்.
அதன் பேரில் கட்டுமானங்களை தலைமை ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழுவினர் மேற்பார்வை செய்து தரத்தை உறுதி செய்தனர். சில ஆண்டுகளாக வட்டார கல்வி அலுவலகத்துக்கோ, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கோ எந்த ஒரு தகவலையும் அனுப்பாமல் திட்ட பணிகள் நிறைவேற்றப்படுகின்றன. இதனால் கட்டுமானம் அவற்றின் விவரங்கள் என்னவென்று தெரியாமல் ஆசிரியர்களும் பள்ளி மேலாண்மை குழுவினரும் குழப்பத்தில் உள்ளனர்.
கடைசியில், தரம் குறைவாக பணிகள் முடிக்கப்பட்டு ஒப்பந்தக்காரர்கள் வெளியேறி விடுகின்றனர். ஆனால் பொதுமக்கள் ஆசிரியர்களை குற்றம் சொல்லும் நிலை உள்ளது. கட்டுமானங்கள் குறித்த முழு விவரங்கள் ஆசிரியர்களுக்கு முன்கூட்டியே தெரிய வந்தால் பணிக்கு இடையூறு ஏற்படும் என்பதற்காகவே சில ஒன்றிய அதிகாரிகள் வட்டார கல்வி அலுவலகத்திற்கும், தலைமையாசிரியர்களுக்கும் தகவலை அனுப்புவதில்லை என பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, வரும் காலங்களில் அரசு பள்ளிகளில் நடைபெறும் கட்டுமானங்களை குறித்து தகவல்களை முழு விவரத்துடன் முன்கூட்டியே வட்டார கல்வி அலுவலகம் மூலம் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

