சைபர் குற்றத்தில் இழந்த பணத்தை விரைவில் மீட்க வழிகாட்டுதல்: மத்திய உள்துறை அமைச்சகம் வெளியீடு
சைபர் குற்றத்தில் இழந்த பணத்தை விரைவில் மீட்க வழிகாட்டுதல்: மத்திய உள்துறை அமைச்சகம் வெளியீடு
UPDATED : ஜன 15, 2026 11:02 AM
ADDED : ஜன 15, 2026 11:15 AM

புதுடில்லி:
நாடு முழுதும் சைபர் மோசடிகள் மூலம் பணம் பறிப்பது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழந்த பணத்தை விரைவில் பெற்று தர செய்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
நாட்டில் சைபர் குற்றங்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன. டிஜிட்டல் பரிவர்த்தனைகள், ஆன்லைன் ஷாப்பிங், ஆன்லைன் பங்குசந்தை வர்த்தகம் உள்ளிட்டவை பெருகியதால், மோசடி கும்பல்கள் இந்த வழிகளில் மக்களை ஏமாற்றி வருகின்றன.
கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 53,000 கோடி ரூபாய் அளவுக்கு இந்தியர்கள் சைபர் மோசடியில் பணத்தை இழந்துள்ளனர். இதில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த தொகை பல மடங்கு அதிகரித்துள்ளது. இவற்றை தடுக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இந்தியன் சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் இயங்குகிறது.
இந்த மையம் தேசிய சைபர் குற்ற புகார் தளம் மற்றும் சைபர் நிதி மோசடி புகார்கள் மற்றும் மேலான்மை அமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. இங்கு புகார்கள் உடனடியாக பதிவு செய்யப்பட்டு, இழந்த பணத்தை முடக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். இதுவரை 23 லட்சத்துக்கும் மேற்பட்ட புகார்கள் மூலம் 7,130 கோடி ரூபாய் வரை மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழந்த பணத்தை விரைவில் பெற்று தர புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன் விபரம்:
சைபர் மோசடியில், 50,000 ரூபாய் வரை இழந்த தொகையை நீதிமன்ற உத்தரவு இன்றியே விரைவாக திரும்பப் பெறலாம். சைபர் மோசடி சந்தேகம் காரணமாக வங்கிகள் முடக்கிய தொகையை நீதிமன்ற உத்தரவு இல்லையெனில், 90 நாட்களுக்குள் தானாக விடுவிக்க வேண்டும்.
மோசடி நடந்த பின் சைபர் புகார்களை கையாள வங்கிகள், ஆன்லைன் பரிவர்த்தனைகளை எளிதாக்கும், 'பில்டெஸ்க்' போன்ற நிறுவனங்கள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், பங்குச்சந்தை வர்த்தக செயலிகள் உள்ளிட்ட அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியான நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டோரின் புகார்களை தாமதமின்றி, கால வரம்புக்குள் தீர்க்கப்படுவதை உறுதி செய்ய தொகை மற்றும் மோசடியின் சிக்கல் தன்மைக்கு ஏற்ப மூன்று படிநிலை அமைப்பு செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சைபர் மோடியில் மக்கள் இழந்த பணம் ஆண்டு தொகை (கோடியில்) 2020 ரூ.8.56; 2021 ரூ.551; 2022 ரூ.2,290; 2023 ரூ.7,463; 2024 ரூ.22,849; 2025 ரூ.19,812;

